காகித ஆலையில் ரசாயனக் கசிவு: அமெரிக்காவில் 11 பேர் பலி!
வாஷிங்டனில் உள்ள ஒரு காகித ஆலையில் ஏற்பட்ட ரசாயனக் கசிவில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள காகித ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அங்கு ரசாயனக் கசிவு ஏற்பட்டது. இதனால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
வாஷிங்டனில் லாங்வியூ பகுதியில் உள்ள இந்த ஆலையில், ஆயிரக்கணக்கான கொள்கலன்களில் அரிக்கும் தன்மை கொண்ட ரசாயன திரவம் ஒரு மிகப்பெரியத் தொட்டியில் இருந்துள்ளது. அது திடீரென வெடித்துச் சிதறியதில் பெரியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்கு பணிபுரிந்தவர்களில் 11 பேர் காணாமல் போன நிலையில் இருவர் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மீதமுள்ள 9 பேரின் உடல்களும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிப்பான் டைனாவேவ் பேக்கேஜிங் நிறுவனத்தில் ‘ஒயிட் லிக்கர்’ எனப்படும் ஒரு ரசாயனத்தை அதிகளவில் கொண்டிருந்த 9,00,000 கேலன் (3.4 மில்லியன் லிட்டர்) தொட்டி உடைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
‘ஒயிட் லிக்கர்’ என்பது சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் சோடியம் சல்பைடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு அதிக காரத்தன்மை வாய்ந்த ரசாயனமாகும். மரத்துண்டுகளை உடைத்து காகிதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கூழை உருவாக்க இது பயன்படுத்தப்படுகிறது.
ஜப்பானின் நிப்பான் காகித குழுமத்தின் துணை நிறுவனமான நிப்பான் டைனாவேவ் பேக்கேஜிங், ஒவ்வொரு ஆண்டும் 8 பில்லியன் அளவில் ஒயிட் லிக்கர் கொள்கலன்களை தயாரித்து உலகம் முழுவதும் விநியோகித்து வருகின்றது.