ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்: இஸ்ரேல்
தெற்கு லெபனானில் உள்ள பியூஃபோர்ட் கோட்டையைச் சுற்றி இஸ்ரேலியப் படைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என ராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார்.
“லெபனானில் இருந்து பயங்கரவாத அமைப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தொடர்ந்து ஈடுபடும். போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டால் தாக்குதல் நடவடிக்கைகளை மேலும் அதிகரிப்போம்.
இஸ்ரேல் மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் எந்த அச்சுறுத்தலும் உடனடியாகத் தாக்கி அழிக்கப்படும்” என்று ராணுவப் படைத் தலைவர் எயால் ஜமீர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் ராணுவத்தினர் தெற்கு லெபனானில் உள்ள பழமை வாய்ந்த கோட்டைகளைக் கைப்பற்றியுள்ளனர். அங்கு கைப்பற்றப்பட்ட பியூஃபோர்ட் கோட்டையில் சுரங்கப்பாதை ஒன்று கண்டறியப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேலைத் தாக்குவதற்கு உதவிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1982-ல் லெபனான் மீதான படையெடுப்பில், கோட்டையின் சுரங்கப்பாதைகளில் மறைந்திருந்த பாலஸ்தீனப் போராளிகளுடன் நடந்த போரைத் தொடர்ந்து இஸ்ரேல் இந்தக் கோட்டையை ஏற்கனவே கைப்பற்றியிருந்தது. பின்னர், 2000-ல் இஸ்ரேலியப் படைகள் அங்கிருந்து வெளியேறும் வரை, இஸ்ரேல் அதை முக்கிய கண்காணிப்பு பகுதியாக வைத்திருந்தது.
ஈரானின் உச்சத் தலைவர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக மார்ச் 2 அன்று இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினர், லெபனானை அந்தப் போருக்குள் இழுத்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி லெபனானில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றது.