;
Athirady Tamil News

நல்லூர் மற்றும் மடு திருவிழாவிற்கு விசேட போக்குவரத்து சேவை

0

நல்லூர் திருவிழா மற்றும் மடு திருவிழா ஆகிய இரண்டு முக்கிய திருவிழாக்களுக்கும் சிறப்பு போக்குவரத்துச் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக , நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் , உரும்பிராய் பகுதியில் புனரமைக்கப்பட்டு வீதியினை கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,

வடக்குக்கான புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் , நல்லூர் திருவிழா மற்றும்  மடு திருவிழாவிற்காகச் சிறப்பு புகையிரத சேவை மற்றும் பேருந்து சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறோம்.

மலையக பகுதிகளில் புகையிரத பாதைகள் சேதமடைந்துள்ளதால், அவற்றின் புனரமைப்புப் பணிகளுக்காகச் சில புகையிரத இயந்திரங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது.

அதற்காக 4 –  5 புகையிரத இயந்திரங்கள் அங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

வரகாபொல பகுதியில் ஒரு புகையிரத இயந்திரம் இன்னமும் மீட்க முடியாமல் சிக்கியுள்ளது. இதனால் புகையிரத சேவைக்கு தேவையான புகையிரத இயந்திரங்கள் இல்லாத நிலைமை காணப்படுகிறது. இதொரு தற்காலிகப் பிரச்சினை .

இவ்வாறான நெருக்கடிகள் இருந்தாலும், நல்லூர் திருவிழா மற்றும் மடு திருவிழா ஆகிய இரண்டு முக்கிய திருவிழாக்களுக்கும் நிச்சயமாக சிறப்பு சேவைகளை வழங்குவோம்

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் ஒரே ஒரு புகையிரத நிலையமான மாங்குளம் புகையிரத நிலையத்தில் , அனைத்து புகையிரதங்களையும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலருடன் கலந்துரையாடியுள்ளேன்.

புகையிரத திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் துரித கெதியில் நடைபெற்று வருகிறது. அதனால் , முற்பதிவு பிரச்சனைகள் வராது என நினைக்கிறேன்.

பிற புகையிரத நேர அட்டவணையை கருத்தில் கொண்டு, மாங்குளத்தில் புகையிரத்தை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.