;
Athirady Tamil News

இனப்படுகொலை! இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக துருக்கி பிடி உத்தரவு!

0

இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக துருக்கி அரசு சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

காஸா மீது கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வந்த போருக்கு எதிராக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததுடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இனப்படுகொலையில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டி வந்தார்.

இதனைத் தொடர்ந்து, துருக்கியில் இருந்து கடந்த மே மாதம் காஸாவுக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற 50-க்கும் அதிகமான சர்வதேச கப்பல் கூட்டத்தை நடுவழியில் இஸ்ரேல் படைகள் தடுத்து நிறுத்தி 430 ஆர்வலர்களைக் கைது செய்தது.

பின்னர், விடுவிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 430 ஆர்வலர்கள் இஸ்ரேலிய சிறைகளில் பல்வேறு கொடுமைகளை எதிர்கொண்டதாகக் குற்றஞ்சாட்டினர். மேலும், சிறையில் கைகள் கட்டப்பட்டு முழங்காலிட்ட நிலையில் இருந்த ஆர்வலர்களை இஸ்ரேலின் வலதுசாரி அமைச்சரான பென் குவிர் ஏளனம் செய்யும் விடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் விசாரணையைத் துவங்கியுள்ள நிலையில், இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அஃபெக் மோஸ்கோவிச் ஆகியோரைப் பிடிக்க சர்வதேச காவல்படைக்கு துருக்கி அரசு பிடி உத்தரவுக்கான ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கவுள்ளதாக, துருக்கியின் சட்டத்துறை அமைச்சர் அகின் குர்லக் நேற்று (ஆக. 21) தெரிவித்துள்ளார்.

இத்துடன், நெதன்யாகு மற்றும் அஃபெக் மோஸ்கோவிச் ஆகியோரின் மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை, கடுமையான வகையில் சுதந்திரத்தைப் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் போரில் 78,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.