வாகன இறக்குமதி கட்டணம் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
இலங்கையில், டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க கூடுதல் கட்டணம் (Customs Surcharge) நீக்கம் குறித்து கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க விளக்கமளித்துள்ளார்.
இதன்படி அந்த நேரத்தில் இலங்கையின் வெளிநாட்டு செலாவணி நிலைமை எவ்வாறு உள்ளது என்பதன் அடிப்படையிலேயே கட்டணம் நீக்கம் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் வாகன விலைகள் மற்றும் இறக்குமதி வரிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய முக்கிய முன்னுரிமை எனக் குறிப்பிட்ட அமைச்சர், அதன் பின்னரே இத்தகைய வரி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என கூறியுள்ளார்.
மேலும், வெளிநாட்டு செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதி தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, அரசாங்கம் ஆரம்பத்தில் சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகன இறக்குமதியை எதிர்பார்த்திருந்த நிலையில், வரிகள் மற்றும் மேலதிக கட்டணங்கள் உள்ளிட்ட மொத்த மதிப்பின் அடிப்படையில் இந்த ஆண்டில் வாகன இறக்குமதி சுமார் 2.1 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.