;
Athirady Tamil News

Menopause பெண்களை அச்சுறுத்தும் எலும்புப் புரை!!! (மருத்துவம்)

0

எலும்பின் வலிமை’ இன்று பெரும் வணிகமாகி விட்டது. அதனால்தான் ‘‘கால்சியம் குறைவா..? அப்போ இதை தினமும் குடிங்க’’ என்று சொல்லும் விளம்பரங்கள் நம்மை நோக்கி ஏராளமாக இன்றைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பெண்களின் மாதவிடாய் நின்று போன பின்பு (Menopause) வரக்கூடிய எலும்பு வலிகளை தவிர்ப்பதற்காக ‘’இதைச் செய்யுங்கள்… அதைக் குடியுங்கள்’’ என்று சொல்லிக்கொண்டு பல வணிக வியூகங்கள் பெண்களைச் சூழ்வதை பார்க்கலாம்.

இப்படிப்பட்ட சூழலில் எலும்புப் புரையை பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகிறது. எனவே, எலும்புகளின் அமைப்பு தொடங்கி, அதிலிருந்து எப்படி வருமுன் காத்துக் கொள்வது என்பது வரை இக்கட்டுரை வாயிலாக விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

எலும்புகளின் அமைப்பு…

*நம் உடலிலேயே மிக உறுதியான உறுப்பு என்றால் அது எலும்புகள் தான். எலும்புகள் உயிருள்ள மற்றும் எப்போதும் வளரும் உறுப்பு. இதனால் தான் முதியவர்களுக்கு கூட எலும்பு முறிவு ஏற்பட்டால் மீண்டும் வளர்ந்து சரியாகும்.

*எலும்புகள் கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்தால் உருவானது.

*எலும்பின் முனைகள் தான் மற்ற எலும்பின் முனையோடு சேர்ந்து மூட்டு ஆகிறது. அவ்வாறு இணையும் முனைகளை ஜவ்வு, மூட்டு திரவம் போன்றவை இவ்விரு முனைகளும் உராயாமல்
பாதுக்காக்கும்.

*எலும்புகள் பல அடுக்குகளால் ஆனது. முதல் அடுக்கில் ரத்த நாளங்கள் இருக்கும். இரண்டாம் அடுக்கு மிகுந்த வலிமையுடனும், திடமானதாகவும் இருக்கும். மூன்றாம் அடுக்கு திடமான திசுகளால் உருவாகவில்லையென்றாலும் வலிமையுடன் தான் இருக்கும். நான்காம் அடுக்கில் (உட்புற அடுக்கு) bone marrow என்று சொல்லப்படும் எலும்பு மஜ்ஜை இருக்கும். இதிலிருந்து தான் ரத்தம் உருவாகத் தேவையான சிவப்பு செல்கள் உருவாகும்.

எலும்புப் புரை…

*பல அடுக்குகளில் வடிவமைக்கப்பட்ட எலும்புகள், வயதாக ஆக அதன் தடிமனை (அடர்த்தி) இழப்பதே எலும்புப் புரையாகும்.

*எலும்பு தாது அடர்த்தி (Bone Mineral Density) என்று சொல்லப்படும் இந்த அடர்த்தி குறையத் தொடங்கும் ஆரம்ப நிலையே எலும்பு திண்ம குறைபாடு (Osteopenia) ஆகும்.

*இந்த அடர்த்தி அதிகம் குறைந்தால் எலும்புகள் மிகவும் வலுவிழந்து எலும்பு முறிவுகள் (Fractures) ஏற்படக்கூடும்.

தரவுகள் சொல்பவை…

*ஆண்களை விட நான்கு மடங்கு அதிகமாக பெண்கள் தான் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

*இந்தியாவில் ஐம்பது வயதைக் கடக்கும் பெண்களில் ஐம்பது சதவிகிதம் பேருக்கு எலும்பு திண்ம குறைபாடு வருகிறது.

*முப்பத்தி ஐந்து வயதைக் கடக்கும் பெண்களில் ஆறில் ஒரு பெண் எலும்புப் புரை குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

*உலகளவில் ஒரு வருடத்திற்கு 200 மில்லியன் பேர்களுக்கு எலும்புப் புரை நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

காரணங்களும், ஆபத்துக் காரணிகளும்…

*பெண்களுக்கு ஏற்படும் Menopause (மாதவிடாய் நின்று போதல்). மாதவிடாய் சுழற்சி முற்றிலுமாய் நின்றுவிட்டால் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி குறைந்துவிடும். இந்த ஹார்மோன்கள் தான் எலும்புகளை அடர்த்தியாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

*கால்சியம் குறைபாடு.

*வைட்டமின் டி குறைபாடு (இந்த வைட்டமின் தான் சுண்ணாம்பு சத்தை உணவிலிருந்து உடல் உறிஞ்சி சேர்த்து வைக்க உதவுகிறது. ஆகையால் இதுவும் அவசியமான ஒன்று).

*பெண்களின் ஹார்மோன் உற்பத்தியில் மாறுபாடுகள்.

*மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளோருக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம்.

*குடும்பத்தில் மூத்தோருக்கு இப்பிரச்சினை இருந்தாலும் பின் வரும் சந்ததிகளுக்கு வர வாய்ப்புகள் உள்ளது.

*தைராய்டு ஹார்மோன் அதிகமாக இருந்தாலும் எலும்புகளின் அடர்த்தி குறையக் கூடும்.

*உடல் உழைப்பு தேவை இல்லாத வாழ்க்கை முறையில் இருப்போருக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம்.

வரக்கூடிய விளைவுகள்…

*அடிக்கடி உடல் வலி உண்டாவது.

*எலும்பு முறிவுகள் ஏற்பட அதிக அளவில் வாய்ப்புகள் உண்டு (குறிப்பாக, மணிக்கட்டு மற்றும் இடுப்பு எலும்பு முறிவது).

எப்படி கண்டறியலாம்…

*நாற்பது வயதான பின் அடிக்கடி உடல் வலி வந்தால் இயன்முறை மருத்துவர் அல்லது எலும்பு மூட்டு மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் எலும்பின் அடர்த்தியை கண்டறிய டெக்ஸா (DEXA) ஸ்கேன் பரிந்துரை செய்வர். இதன் அளவுகளைக் கொண்டு எவ்வளவு அடர்த்தி பாதிக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு தீர்வுகளை பரிந்துரைப்பர்.

அடர்த்தியின் அளவுகள்…

*இயல்பான ஆரோக்கியமான நிலை: -1.0 மற்றும் அதற்கும் மேல் (+1.0).
*எலும்பு திண்ம குறைபாடு: -1.1 முதல் -2.4 இருந்தால்.
*எலும்புப் புரை: -2.5 மற்றும் அதற்கு மேல் இருந்தால்.

சில தீர்வுகள்…

*எலும்பு அடர்த்தியின் அளவு -2.5 அளவுக்கு குறைந்திருந்தால் கட்டாயம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் மாத்திரை மருந்துகளை எலும்பு மூட்டு மருத்துவர் பரிந்துரைப்பார்கள்.

*மிகவும் எளிதான உடற்பயிற்சிகளை இயன்முறை மருத்துவர் மிக கவனமாக கற்றுக் கொடுப்பார்கள்.

*இதனால் எலும்புகள் மீண்டும் முழுவதுமாக பழைய அடர்த்தி நிலைக்கு திரும்பாது என்றாலும் அடர்த்தியின்மையால் ஏற்படும் எலும்பு முறிவுகளை தடுக்கும். மேலும் நிலை மோசமாகாமல் பாதுகாக்கும்.

வராமல் தடுக்க…

*கால்சியம் மற்றும் வைட்டமின் டி இருக்கும் உணவுப் பொருட்களை உணவு நிபுணர்களின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

*இளம் பருவத்திலிருந்தே எளிதான உடற்பயிற்சிகள் செய்து வர வேண்டும். இதனால் எலும்புப் புரை வராமல் தடுக்கவும், தாமதமாய் வருவதற்கும் உதவும். மேலும் எலும்புகளை வலிமையாய் வைத்திருப்பதற்கும் உதவும்.

*எழுபது வயதைக் கடந்தவர்கள் எலும்புப் புரை இருந்தால், நடக்கத் தேவையான கைத்தடி பயன்படுத்துவது, குளியலறை போன்ற இடங்களில் கீழே விழாமல் இருக்க ஏதுவான கைப்பிடி, சுரசுரப்பான தரை போன்றவற்றை அமைக்க வேண்டும்.

*நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களும், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை எலும்பின் அடர்த்தியை மருத்துவர் பரிந்துரைப்படி செய்துகொள்ள வேண்டும்.

*மது மற்றும் புகைப் பிடித்தல் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

*எலும்பு மூட்டு மருத்துவர் அல்லது உணவுத் துறை நிபுணரின் ஆலோசனை இல்லாமல் கால்சியம் மாத்திரைகள் பயன்படுத்துவது தவறு. அதிக சுண்ணாம்பு சத்தும் உடலில் இருப்பது ஆபத்து தான்.

மொத்தத்தில் இளம் வயதிலிருந்தே போதிய போஷாக்குடனும், தேவையான உடற்பயிற்சியுடனும் நாம் இருப்பது மிக அவசியம். அதேபோல நீண்ட நாட்கள் உடல் வலி தொடர்ந்து வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவதும், தேவையான சிகிச்சையை மேற்கொள்வதும் மிக நல்லது என்பதை நாம் எப்போதும் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.