;
Athirady Tamil News

லிதுவேனியா விதித்துள்ள தடையை உடனடியாக மீள பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரஷ்யா எச்சரிக்கை..!!

0

லிதுவேனியா விதித்துள்ள தடையை உடனடியாக மீள பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளதன் பின்னணியில் அதை காரணம் காட்டி தற்போது ரஷ்ய பொருட்களை ரயில் பாதை வழியாக கலினின்கிரேட்க்கு கொண்டு செல்ல லிதுவேனியா திடீரென தடை விதித்துள்ளது.

இதனால் கட்டுமான பொருட்கள், நிலக்கரி உட்பட முக்கிய பொருட்களை கலினின்கிரேட்க்கு கொண்டு செல்ல முடியாத நிலை ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. லிதுவேனியாவின் இந்த முடிவை ரஷ்யா கடுமையாக எதிர்த்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”பொருட்களை கொண்டு செல்ல லிதுவேனியா விதித்துள்ள தடையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அது லிதுவேனியா மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். கலினின்கிரேடு பகுதிக்கும் ரஷ்யாவுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்கான தடை நீடித்தால், லிதுவேனியா மீது நடவடிக்கை எடுக்க ரஷ்யா அனைத்து உரிமைகளும் உள்ளன” என்று எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், லிதுவேனியாவின் முடிவு பெரும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விளாடிமீர் புடின் ஆய்வு நடத்தி வருகிறார் என்று கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறினார்.

ஆனால், லிதுவேனியா வெளியுறவுத் துறை அமைச்சர் கேப்ரிலியஸ் லேண்ட்ஸ்பெர்கிஸ் கூறுகையில், ”ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையைதான் அமுல்படுத்தி இருக்கிறோம். அதன் வழிகாட்டுதலின்படிதான் செயல்பட்டிருக்கிறோம். அதை ரஷ்யா தவறாக புரிந்து கொண்டுள்ளது” என கூறினார்.

கலினின்கிரேட் ஆளுனர் ஆன்டன் அலிகனோவ் கூறுகையில், ”லிதுவேனியாவின் தடை கடந்த வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் பீதியடைய வேண்டாம்” என கூறினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜேர்மனியிடம் இருந்து கலினின்கிரேட் பகுதியை ரஷ்யா தன் வசமாக்கி கொண்டது. எனினும், ரஷ்யாவுடன் இணைந்த ஒரே நிலப்பரப்பாக இல்லாத கலினின்கிரேட் பகுதி, நேட்டோ உறுப்பு நாடுகளாக உள்ள போலந்து – லிதுவேனியாவுக்கு இடையில் பால்டிக் கடல் பகுதியை ஒட்டியுள்ளது.

கலினின்கிரேட் பகுதிக்கு லிதுவேனியா வழியாக ரயிலில் சரக்குப் போக்குவரத்தும் காஸ் குழாய்களையும் ரஷ்யா கொண்டு செல்கிறது. இந்நிலையில், ரஷ்ய பொருட்களை ரயில் பாதை வழியாக கலினின்கிரேட்க்கு கொண்டு செல்ல லிதுவேனியா தடை விதித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.