;
Athirady Tamil News

நளினி விடுதலை கோரிய வழக்கு: தெரிவிக்காதவற்றை நீக்கிவிட உத்தரவு..!!

0

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான தீர்மானத்தை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பியது சரியென அரசு வாதிட்டதாக பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.தி.மு.க.,) ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி, அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்தார்.

இதையடுத்து, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்த தீர்ப்பில், தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்காத கருத்துக்கள் மற்றும் வாதங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த பகுதியை நீக்க வேண்டும் என்று உள்துறை இணை செயலாளர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சரி என்று தலைமை வழக்கறிஞர் தன் வாதத்தில் கூறியதாக தீர்ப்பில் உள்ளது.

ஆனால், அவர் அப்படி எதுவும் கூறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து, ஆளுநரோ அல்லது ஜனாதிபதியோ கையெழுத்திட வில்லை என்றால், நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று தலைமை வழக்கற்ஞர் கூறியதாக தீர்ப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.