;
Athirady Tamil News

டெல்லியை போன்று உ.பி.யில் சம்பவம்- முன்னாள் காதலியை கொன்று உடலை 6 துண்டாக வெட்டிய வாலிபர்..!!

0

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொன்று உடலை 35 துண்டுகளாக வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியை போன்றே உத்தரபிரதேச மாநிலத்திலும் இது மாதிரியான கொடூரமான சம்பவம் நிகழ்ந்து உள்ளது. முன்னாள் காதலியை வாலிபர் கொன்று உடலை 6 துண்டுகளாக வீசியுள்ளார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டம் இசாக்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராதனா. இவரை அதே பகுதியை சேர்ந்த பிரினஸ் யாதவ் என்பவர் காதலித்துள்ளார். இந்த காதலில் முறிவு ஏற்பட்டு வேறு ஒருவரை ஆராதானா திருமணம் செய்து உள்ளார். இதனால் தனது முன்னாள் காதலியை கொல்ல அவர் முடிவு செய்தார். இதற்கு அவரது பெற்றோர், உறவினர் சர்வேஷ் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் உதவியாக இருந்தனர். கடந்த 9-ந்தேதி கரும்பு தோட்டத்தில் வைத்து ஆராதனாவை பிரின்ஸ் யாதவ் கழுத்தை நெறித்து கொன்றார். அவரும், சர்வேசும் சேர்ந்து உடலை 6 துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பையில் அடைத்து கிணற்றில் வீசினர். அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள குளத்தில் தலையை வீசினர். கிணற்றில் உடல் பாகங்கள் கிடக்கும் தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்றனர். போலீஸ் விசாரணையில் பிரின்ஸ் யாதவ் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். இளம் பெண்ணின் தலையை கண்டு எடுப்பதற்காக அவரை போலீசார் அழைத்து சென்றனர். அந்த பகுதியில் நாட்டு துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்தார். தப்பிக்கும் நோக்கில் போலீசாரை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டார். போலீசாரின் என்கவுண்டரில் யாதவ் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். பெண்ணை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்ட அவருக்கு உதவியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். சத்தீஷ்கர் மாநிலத்தில் 24 வயதான பிரியங்கா சிங் என்பவரது உடல் காரில் கண்டு எடுக்கப்பட்டது. பணம் விவகாரம் தொடர்பாக அந்த பெண்ணை வாலிபர் கொன்று உடலை 4 நாட்கள் காரில் வைத்து இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.