;
Athirady Tamil News

கேரள லெஸ்பியன் ஜோடியின் திருமண போட்டோ ஷூட் படங்கள்- சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு..!!

0

கேரளா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா. இவர்கள் இருவரும் பள்ளியில் படித்தபோது நெருங்கிய தோழிகளாக இருந்தனர். அதன்பின்பு கல்லூரியில் சேர்ந்த பின்னரும் இருவரின் நட்பும் தொடர்ந்தது. இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகமானதை தொடர்ந்து அவர்களின் பெற்றோர் இருவரும் சந்திக்க தடை விதித்தனர். இதில் ஒருவரை அவரது பெற்றோர் வெளிநாட்டிற்கு அழைத்து சென்றனர். வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின்னர் ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் மீண்டும் சந்தித்து கொண்டனர். இதில் ஏற்பட்ட பழக்கம் மீண்டும் நெருக்கமாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இருவரையும் காணாததால் அவர்களின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவர்களை தேடி கண்டுபிடித்தனர். அப்போது அவர்கள் இருவரும் பெற்றோருடன் செல்ல மறுத்தனர். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தனர். லெஸ்பியன் ஜோடியான தங்களை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் மனுவில் கூறியிருந்தனர். ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா ஆகியோரின் மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு இருவரையும் சேர்ந்து வாழ அனுமதித்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். என்றாலும் இருவரும் பல தொல்லைகளை சந்திப்பதாக தெரிவித்து இருந்தனர். அப்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அந்த ஆசை இருப்பதாக இருவரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் புதுமணதம்பதிகள் போல் காட்சி அளிக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். மணமகனின் தோளில் மணமகள் தலைசாய்த்து இருப்பது போலும், மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு ஊட்டி கொள்வது போலவும் பலவித படங்கள் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. திருமண கோலத்தில் இருப்பது போல காட்சி அளிக்கும் இந்த படங்கள் பற்றி ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூராவிடம் கேட்ட போது அவர்கள் இன்னும் நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அந்த ஆசை எங்களுக்கு இருக்கிறது, என்று தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறும்போது, நமது சமூகத்தில் பெரும்பாலானோருக்கு போதுமான கல்வி அறிவு இல்லை. மேலும் பொருளாதார வசதியும் போதுமானதாக இல்லை. இதனை பெற நமக்கு ஒரு வேலை அவசியம். நல்ல வேலை இருந்தால் நமது வாழ்க்கையை நாமே பார்த்து கொள்ள முடியும், என்றனர். திருமண போட்டோ ஷூட் படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டதன் மூலம் ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.