ஓடும் காரில் சென்றபடி துப்பாக்கி சூடு.. 8 பேரை ஈவு இரக்கமின்றி கொன்ற நபரை கைது செய்தது செர்பியா போலீஸ் !!
செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள துபோனா என்ற கிராமத்தின் அருகில், நேற்று நள்ளிரவில் ஒரு மர்ம நபர், தானியங்கி துப்பாக்கி மூலம் கண்ணில் பட்ட பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டான். ஓடும் வாகனத்தில் இருந்து கொண்டு அவன் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தான். இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே 8 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர். 14 பேர் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆம்புலன்ஸ் வேன்களும் வரவழைக்கப்பட்டன. குண்டு காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 14 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். சோதனைச் சாவடிகள் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு இன்று அதிகாலையில் கிராகுஜேவாக் நகரின் அருகே கொலையாளியை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் (புதன்கிழமை) பெல்கிரேடு தொடக்கப்பள்ளியில் 13-வயது மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 8 மாணவர்கள் மற்றும் பாதுகாவலர் ஒருவர் இறந்தனர். இந்த சோக சம்பவம் மறைவதற்குள் செர்பியாவில் நடந்த மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.