;
Athirady Tamil News

இஸ்ரேல் – ஈரான் அமைதியின்மை எம்மில் ஏற்படுத்தும் தாக்கம்

0

ச.சேகர்

மத்திய கிழக்கில் நீண்ட காலமாக காணப்பட்டு வந்த பதட்ட நிலை, கடந்த வாரத்தின் பிற்பகுதி முதல் மோதலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் வெள்ளிக்கிழமை முதல் பரஸ்பர தாக்குதல்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன.

அதன் தாக்கத்தை உடனடியாகவே சர்வதேச சந்தையில் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக இந்த யுத்தம் நடைபெறும் பகுதி, கப்பல் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக அமைந்திருப்பதால், எரிபொருள் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படலாம் என்ற பீதி முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அத்துடன், இந்தப் பகுதியில் எழுந்துள்ள அமைதியின்மையின் காரணமாக, சரக்கு கப்பல் காப்புறுதி கட்டுப்பணங்களும் பெருமளவு அதிகரித்துள்ளன. குறிப்பாக, பிரென்ட் குரூட் எனப்படும் கச்சா எண்ணெய் விலை பெரல் ஒன்றுக்கு 8 சதவீத அதிகரிப்பை பதிவு செய்து, 75 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. இந்த விலை உயர்வுகள் அனைத்தும், நுகர்வுச் சங்கிலியில் இறுதியாக அமைந்திருக்கும் இறுதி நிலை நுகர்வோரை சென்றடையும் என்பதில் விவாதங்களில்லை. ஒரு சில அபிவிருத்தியடைந்த நாடுகள் இந்த விலை உயர்வை தாம் பொறுப்பேற்று மக்களுக்கு ஏதேனும் வகையில் நிவாரணங்களை வழங்கிய போதிலும், இலங்கையைப் பொறுத்தமட்டில், அவ்வாறு நிவாரணம் வழங்கக்கூடிய நிலையில் தற்போது அரசாங்கத்தின் நிலை இல்லை என்பதே யதார்த்தம். கடந்த காலங்களில் எவ்விதமான தூர நோக்குமின்றி, இவ்வாறு தான்தோன்றித்தனமான நிவாரணங்களை வழங்கியிருந்த அரசாங்கத்தை மக்களே துரத்தியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் என்பது போக்குவரத்து தேவைகளுக்கு மாத்திரமன்றி, பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் செயன்முறையிலும் சேவை வழங்கல்களிலும் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றது. அதனால், எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது சகல பொருட்கள் மற்றும் சேவைகள் அதிகரிப்பிலும் தாக்கம் செலுத்தும். உதாரணமாக, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த முறுகல் நிலையினால், நமது உள்நாட்டில் விளையும் மரக்கறிகளின் விலைகள், அல்லது எமது கடல் எல்லையினுள் பிடிக்கப்படும் மீன்களின் விலைகளில் கூட விலை அதிகரிப்பு ஏற்படுவதில் தாக்கம் செலுத்தும்.

ஈரானின் எரிபொருள் மற்றும் எரிவாயு உற்பத்தி நாளொன்றுக்கு 3.3 பில்லியன் பெரல்களாக அமைந்துள்ளது. கச்சா எண்ணெய் நாளொன்றின் ஏற்றுமதி 1.8 பில்லியன் பெரல்களாக காணப்படுவதுடன், சீனாவின் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை கொள்வனவு செய்கின்றனர். உலகின் மூன்றாவது மாபெரும் எரிபொருள் உற்பத்தியாளராக ஈரான் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. எரிவாயு உற்பத்தியை பொறுத்தமட்டில், உலகின் எரிவாயு தேவையில் 7 சதவீதத்தை ஈரான் உற்பத்தி செய்கின்றது. இந்த நிலைகளை இலக்கு வைத்து ஈஸ்ரேல் வார இறுதியில் தாக்குதல்களை நடாத்தி, சேதங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் உலகின் மாபெரும் எரிவாயு உற்பத்திப் பகுதியின் செயற்பாடுகள் பகுதியில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஈரான் வார இறுதியில் அறிவித்திருந்தது.

ஏற்கனவே ஈரானிடமிருந்து நேரடியாக எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவுக்கு அமெரிக்கா தடைவிதித்திருந்த நிலையில், ஈரான் தமது வர்ததக நடவடிக்கைகளை கப்பல-கப்பல் மற்றும் செய்மதிகளிலிருந்து மறைத்து விநியோகிக்கும் முறைகளில் விநியோகித்திருந்தது. தற்போது இஸ்ரேல் – ஈரான் முறுகல் முற்றியுள்ள நிலையில், இந்த விநியோகம் தடைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதிய வியாக்கியானத்தின் அடிப்படையில், சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை 10சதவீதம் அதிகரிக்கும் போது அபிவிருத்தியடைந்த நாடுகளின் பணவீக்கம் 0.4 சதவீதப் புள்ளிகளால் அதிகரிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விலைகள் ஒரு பக்கமிருக்க, தற்போது முறுகல் நிலை தோன்றியுள்ள பகுதி, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக அமைந்துள்ளது. செங்கடல் முதல் சுயெஸ் கால்வாய் வரையில் சர்வதேச கப்பல் போக்குவரத்து நடைபெறும் முக்கிய பகுதியில் ஈரானின் பின்புலத்தில் இயங்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இந்தப் பகுதியினூடாக பயணிக்கும் கப்பல்களின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன. இதனால் ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பயணிக்கும் பல சரக்குக் கப்பல்கள் ஆபிரிக்காவை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. இதனால் பயணத்துக்கான காலம் மேலதிகமாக ஓரிரு வாரங்கள் நீடிக்கப்படுவதுடன், இந்தப் பயணத்தக்கான கட்டணங்களும் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மேலதிகமாக அமைந்திருப்பதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

அத்துடன், பாரசீக குடா மற்றும் அரபுக் கடலை இணைக்கும் ஹோர்மூஸ் நீரிணையை போக்குவரத்துக்கு தடை செய்யப் போவதாக ஈரான் தொடர்ந்தும் எச்சரித்து வருகிறது. இந்த நீரிணையினூடாக உலகின் எரிபொருள் வர்த்தகத்தின் நான்கில் ஒரு பகுதி பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நீரிணை போக்குவரத்துக்கு தடைப்படுமாயின், பெரல் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர்கள் வரை உயரக்கூடும் என கோல்ட்மன் சாக்ஸ் எதிர்வுகூரியுள்ளது. கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற பிரதான எரிபொருள் உற்பத்தி நாடுகள் இந்த நீரிணையில் அதிகம் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விமான போக்குவரத்தை பொறுத்தமட்டில், நெருக்கடி நிலை எழுந்துள்ள இஸ்ரேல், ஈரான், ஜோர்தான், சிரியா, லெபனான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளின் வான் பரப்புகளை தவிர்த்து, மாற்று வழிகளினூடாக விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் அடங்கலாக, பல சர்வதேச விமான சேவைகள் அறிவித்துள்ளன. விமானச் சேவைகள் முன்னெடுக்கப்படுவதை காண்பிக்கும் ரேடார் படங்களிலும், மேற்படி நாடுகளின் வான்பரப்புகளில் எவ்விதமான பயணிகள் அல்லது சரக்கு விமான சேவைகள் இடம்பெறாமையை காண்பிக்கின்றன.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்த பின், அதிலிருந்து படிப்படியாக மீண்ட வண்ணமிருக்கும் இலங்கைக்கு இந்த மத்திய கிழக்கு நெருக்கடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, அதிகரிக்கும் எரிபொருள் செலவுகள் காரணமாக, தற்போது வருடாந்தம் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடும் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகையை விட மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிட வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பிரதானமாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பெரும்பாலும் அனைத்துமே அத்தியாவசிய தேவையை நிவர்த்தி செய்யாதவையாக அமைந்துள்ளன. அதாவது ஆடை, தேயிலை போன்றன. இதனால், சர்வதேச சந்தையில் அவற்றுக்கான நுகர்வு குறைவடையும் போது, அவற்றினூடாக கிடைக்கும் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படும்.

அதுபோன்று, இலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பெருமளவு தங்கியுள்ளது. சர்வதேச யுத்தம் போன்ற புறக் காரணிகளால் சுற்றுலாப் பயணிகளின் பிரயாணங்கள் பெருமளவில் குறையும். நாம் கூட, எமது வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் போது, வருடத்தில் மூன்று முறை சுற்றுலா செல்பவர்களாக இருந்தால் அதனை இரண்டு அல்லது ஒன்றாக குறைத்துக் கொள்வது பற்றி சிந்திப்பது யதார்த்தம். இது சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும்.

மத்திய கிழக்கில் பணியாற்றும் இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பும் வெளிநாட்டு பண அனுப்புகைகளிலும் சரிவு ஏற்படும். அவர்கள் பணிபுரியும் நாட்டில் அவர்களின் ஜீவனோபாய செலவுகள் அதிகரிப்பதால், அவர்கள் இலங்கைக்கு அனுப்பும் தொகை குறைவடையலாம்.

மூலப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது உயரும் உற்பத்திப் பொருட்களின் விலை, அதே மூலப்பொருட்களின் விலைகள் குறையும் போது வீழ்ச்சியடையும் ஒரு கலாசாரம் இலங்கையில் காணக்கிடைப்பதில்லை. உதாரணமாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் போது உயரும் போக்குவரத்துக் கட்டணங்கள், அவை குறையும் போது குறைவதில்லை. மின்சாரக் கட்டணம் உயரும் போது அதிகரிக்கும் குளிர்சாதனப் பெட்டியிலுள்ள நுகர்வுப் பொருட்கள், மின் கட்டணம் குறையும் போது குறைவதில்லை. இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு அல்லது கண்காணிப்பதற்கு எந்த பொது அமைப்புகளும் முன்வருவதுமில்லை. ஆட்சியிலுள்ள அரசாங்கங்கள் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு “மாஃபியாக்கள்” என பெயர்சூட்டி அவற்றை பொது வெளியில் பேசி பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்வதைத் தவிர, இவற்றை கண்காணித்து, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார் யாரும் இல்லை.

பாகிஸ்தான் இந்தியா இடையே கடந்த மாதம் ஒரு போர் சூழும் நிலை எழுந்த போது, அமெரிக்கா தலையிட்டு அந்த நிலை மேலும் மோசமடையாமல் இருக்க நடவடிக்கை எடுத்திருந்தாலும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையில் எழுந்துள்ள இந்த நெருக்கடியான நிலையை தணிப்பதில் அமெரிக்கா பெருமளவு ஈடுபாட்டை காண்பிக்காது என்பது போலவே ஆரம்ப நகர்வுகள் சமிக்ஞைகள் தெரிவிக்கின்றன.

எது எப்படியாயினும், சர்வதேச மட்டத்தில் அத்தியாவசிய நுகர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஏதேனும் உற்பத்தியில் இலங்கை தன்னை இனியாவது ஈடுபடுத்த வேண்டியது முக்கியமாகும். அதனூடாக, எதிர்காலத்தில் எழக்கூடிய இது போன்ற எமது கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட சூழல்களால் எழும் பொருளாதார பாதிப்புகளிலிருந்து ஓரளவேனும் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.