;
Athirady Tamil News

டெல்லியில் முகமூடி கும்பல் கைவரிசை- தொழில் அதிபர் குடும்பத்தினரை துப்பாக்கியால் மிரட்டி ரூ.1¼ கோடி கொள்ளை!!

0

டெல்லி அசோக் விகார் பகுதியில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவர் காண்டிராக்டராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். நள்ளிரவு நேரம் 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் இவரது வீட்டுக்கு வந்தது. அவர்கள் தொழில் அதிபரின் வீட்டு ஜன்னல் கம்பிகளை அறுத்தெடுத்து அதன் வழியாக வீட்டுக்குள் புகுந்தனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த குழந்தைகள் உள்ளிட்டவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.

உடனே அந்த மர்ம கும்பல் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் மிரட்டி அவர்களை வீட்டில் இருந்த ஒரே அறையில் அடைத்தனர். 3 பேர் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பிடித்து வைத்துக்கொள்ள மற்ற 2 பேரும் வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடும் முயற்சியில் ஈடுபட்டனர். பீரோவில் இருந்த 1 கோடியே 30 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 2 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்தது. எல்லாம் முடிந்ததும் முகமூடி கும்பல் தொழில் அதிபர் குடும்பத்தினரிடம் துப்பாக்கியை காட்டி இது பற்றி போலீசில் சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. போலீசார் அந்த வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மகும்பலை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவதற்கு முன்பு அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்து உள்ளனர். இதனால் அந்த பகுதியை நன்கு தெரிந்தவர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.