;
Athirady Tamil News

வேலூர்: பச்சிளம் குழந்தை விரல் துண்டிப்பு! அலட்சியம் காட்டிய செவிலியர் மீது வழக்கு

0

வேலூரில் செவிலியரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 6 நாள் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் அலட்சியமாக இருந்த செவிலியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான விமல்ராஜ் மற்றும் அவரது மனைவி நிவேதா தம்பதியருக்கு, அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 24 ஆம் தேதியில் ஆண்குழந்தை பிறந்தது. இருப்பினும், பேறுகால சிகிச்சைக்காக தாய். சேய் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையில் (மே 30) குளுக்கோஸ் பாட்டிலில் இருந்த ஊசியை மாற்றுவதற்காக, குழந்தையின் கையில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்திரியை அகற்றும்போது, அதனை செவிலியர்களின் கைகளால் அகற்றாமல், கத்தரிக்கோலால் வெட்டி அகற்ற முயன்றனர்.

இதன்போது, எதிர்பாராதவிதமாக, 6 நாள் பச்சிளம் குழந்தையின் வலது கட்டை விரலுடன் சேர்த்து வெட்டி விட்டனர். குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்தை குழந்தையின் குடும்பத்தினர் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செவிலியரின் அலட்சியத்தால் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தையின் கையில் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக, துண்டிக்கப்பட்ட விரலுடன் குழந்தையை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.