;
Athirady Tamil News

வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்களைத் தாக்கும் ஈரான்!

0

வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்கள் மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்புகள் மீது ஈரான் குறிவைத்து தாக்கி வருகின்றது. அமெரிக்கப் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்த அண்டை நாடுகள் உதவி புரிவதால் இவ்வாறு தாக்குதல் நடத்துவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தென்மேற்கு கடற்பகுதியில் அமைந்துள்ள ருவாய்ஸ் தொழிற்பகுதியில் பெட்ரோகெமிக்கல் மையத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அங்கு கட்டுக்கடங்காமல் தீ பற்றி எரிகிறது. அதனை, அணைக்கும் பணிகளில் வான் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அலுமினிய தொழிற்சாலைகளையும், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ கட்டமைப்புகளையும் குறிவைத்துள்ளதாக ஈரான் தெரிவித்திருந்தது. ஈரானில் உள்ள பொதுமக்களுக்கான கட்டமைப்புகளை அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்கியதால் அதேபோன்று வளைகுடா நாடுகளில் ஈரான் தாக்குதல் நடத்துகின்றது.

தொடர்ந்து, பஹ்ரைனில் உள்ள கிங்டம் ஸ்டேட் எனர்ஜி எனும் எரிசக்தி மையத்தை டிரோன் மூலம் ஈரான் இன்று தாக்கியுள்ளது. அதேபோல, பாப்கோ எனர்ஜீஸ் என்னும் பெட்ரோகெமிக்கல் மையத்திலும் தாக்குதல் நடத்தியுள்ளது.

அங்கு யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சேதம் பற்றிய மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டு வருகின்றன.

முன்னதாக, குவைத்தின் இரண்டு மின் நிலையம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் பெரிய சேதம் ஏற்பட்டு இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வளைகுடா நாடுகள் தங்களுக்கான நீர் விநியோகத்திற்கு பெரிதும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகளையே சார்ந்துள்ளன. ஆனால், ஈரான் அவற்றின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.