;
Athirady Tamil News

எரிபொருள் விநியோகம்: QR குறியீடு மற்றும் ஒற்றை – இரட்டை இலக்க முறை குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு

0

எரிபொருள் விநியோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை – இரட்டை இலக்க முறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

விநியோக நிலைமை மேலும் சீரடையும் பட்சத்தில், தற்போதுள்ள கட்டுப்பாடுகளைப் படிப்படியாக நீக்க அரசாங்கம் தயாராக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் நேற்று (05.04.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம்
அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்காக ஏப்ரல் மாதத்திற்குள் 9 எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை.

மத்திய கிழக்கு போர் வெடித்ததன் பின்னர் உருவான எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் ஏற்கனவே வெற்றிகரமாக நிர்வகித்துள்ளது.

தட்டுப்பாடுகளைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை – இரட்டை இலக்க முறை மற்றும் புதன்கிழமை பொது விடுமுறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன.

கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கம்
தற்போது எரிபொருள் வரிசைகள் குறைந்துள்ளன. விநியோக நிலைமை மேலும் சீரடையும் பட்சத்தில், தற்போதுள்ள கட்டுப்பாடுகளைப் படிப்படியாக நீக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

இந்தநிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதன்கிழமை விடுமுறை முறைமை, நிலைமை வழமைக்குத் திரும்பியதும் நீக்கப்பட்டு, நாட்டின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும்.

அத்துடன் QR முறைமை தற்போது வினைத்திறனாகச் செயல்பட்டு வருவதாகவும், விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் இயல்பு நிலையை உறுதிப்படுத்த அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.