வருட இறுதிக்குள் சிறைக்கு செல்லவுள்ள முக்கிய புள்ளிகள் ; அதிர வைத்த ஜனாதிபதி
இந்த வருடத்திற்குள் அதிகளவானவர்கள் சிறைக்கூடம் செல்வார்கள் என்பது உறுதி. எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
உழைக்கும் மக்களின் அரசாங்கம்
வடக்கு, கிழக்கு. தெற்கு மற்றும் மலையகம் அனைத்து பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்றனர். இலங்கையின் முதன்முறையாக உழைக்கும் மக்களின் நோக்கத்தை அடிப்படையாக வைத்து தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கமாக உருவாகியுள்ளது.
டித்வா புயலினால் பெருந்தோட்டத்துறை சார்ந்த விவசாய நிலங்கள், விவசாய நிலங்கள் என்பன சேதமாகின. நாம் உழைக்கும் மக்களுக்கான அரசாங்கம் என்ற வகையில் அதிகளவான நிவாரணங்களை வழங்கினோம்.
அதேபோன்று உழைக்கும் மக்களுக்கான அரசாங்கம் என்பதாலேயே தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அதிகரித்தோம். அரசாங்கத்தின் ஸ்தீரதன்மை மக்களின் நம்பிக்கையிலேயே தங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகள் தற்போது சிதறிக் கிடக்கின்றன. அவர்கள் தனித்தனியே கூட்டங்களை கூட்டி மே தினத்தில் கதைக்கிறார்கள். அவர்களால் அரசாங்கத்தின் மே தின கூட்டத்தைப் போல் அரைவாசியாவது சேர்த்து காட்ட முடியுமா என சவால் விடுக்கின்றோம்.
தமிழ் மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. எனவே தமிழ் மொழி மூலமான கல்வியற்கல்லூரிகளில் அதிகளவான தமிழ் ஆசிரியர் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான கலந்துரையாடல்களை கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுத்து வருகின்றோம்.
மக்களும், அரசாங்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கும் அரசாங்கமாக இது அமைந்துள்ளதால், மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தமது சேவை அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.