காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!
காங்கோவில், பரவி வரும் எபோலா பாதிப்புகளால் இதுவரை 1,500-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், எபோலா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மே 15 அன்று பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட புண்டிபுகியோ வைரஸ் தொடர்புடைய எபோலா பாதிப்புகளுக்கு இதுவரை எந்தவொரு தடுப்பூசி மற்றும் சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
காங்கோ முழுவதும் எபோலா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் மட்டும் சுமார் 50 சதவிகித பாதிப்புகள் அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) வரை மட்டும் 3,442 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், காங்கோவில் 797 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை எபோலா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,521 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உள்நாட்டு மோதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காங்கோவில் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகுந்த சவாலாக உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் உடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளது.
காங்கோவின் இடூரி மாகாணத்தில் மட்டும் அந்நாட்டில் கண்டறியப்பட்ட 90 சதவிகித எபோலா பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.