;
Athirady Tamil News

ஜோர்டானில் ஏவுகணை வீச்சு… ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி!

0

ஜோர்டானில் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.

சவூதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது கடந்த சில நாள்களாக இராக்கிலிருந்து 30-க்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலடியாக இராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் நேற்று 20 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

கிழக்கு இராக்கில் ஈரான் ஆதரவு பெற்ற ‘பாப்புலர் மொபிலைசேஷன் ஃபோர்சஸ்’ ஆயுதக் குழுக்களின் தளவாடங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து புதன்கிழமை அதிகாலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய படைப்பிரிவு (சென்ட்காம்) தெரிவித்திருந்தது.

அமெரிக்கா – சவூதி அரேபியா தாக்குதலில், பாப்புலர் மொபிலைசேஷன் ஃபோர்சஸ் குழுக்களுடன் ஆலோசகர்களாக செயல்பட்டு வந்த 6 ஈரானியர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜோர்டானில் உள்ள முவாஃபக் சல்டி விமானப் படைத் தளம் மற்றும் அங்குள்ள அமெரிக்க மத்திய படைப்பிரிவின் தலைமையகத்தைக் குறிவைத்து ஈரான் பல ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலில் 5 ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து, ஜோர்டான் ராணுவம் சுட்டுவீழ்த்தியது.

இந்த நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு ஈரானின் தெற்குப் பகுதியைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல்களைத் தொடங்கின.

ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவில் மூன்று முறை வெடிகுண்டு சத்தம் கேட்டதாகவும், அங்கு குடியிருப்பு பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

புஷேர் மற்றும் ஈரானுக்கு தெற்கே பல இடங்களிலும் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் இந்தத் தாக்குதல் சேதம் மற்றும் உயிர்ப்பலிகள் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.