திறைசேரி மோசடி; அதிகாரி மரணம் தொடர்பில் வெளியான தகவல்
மர்மமான முறையில் உயிரிழந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் சம்பவித்த ஒரு தற்கொலை என நான்கு பேராசிரியர்களைக் கொண்ட வைத்தியக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
நிதியமைச்சின் கீழ் உள்ள திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றிய ரங்க ராஜபக்ச, ஏப்ரல் 30ஆம் திகதி தனது வீட்டுத் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி
அவர் அமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி சம்பவம் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவரது கை மற்றும் கால்களில் மூன்று வெட்டுக் காயங்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டது.
இது தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவினால் நான்கு பேர் கொண்ட விசேட மருத்துவக் குழு நியமிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை (01) குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர், குறித்த மரணம் அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காயங்களால் ஏற்பட்ட தற்கொலை என வைத்தியக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.