பிரதமர் மோடி – இத்தாலி அதிபர் சந்திப்பு!
ரோம் : 5 நாடுகளை உள்ளடக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறைப் பயணத்தில் கடைசிகட்டமாக செவ்வாய்க்கிழமை (மே 19) இத்தாலி சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் மெலோனியுடனும் அதிபருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இத்தாலி அதிபர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (மே 20) அந்நாட்டின் அதிபர் செர்கியோ மாட்டரெல்லாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி மற்றும் அணு ஆற்றல் ஆகிய துறைகளில் இரு தரப்பு பங்களிப்பை மேலும் விரிவாக்கம் செய்தல் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர்.
இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (ஐஎம்இசி) முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் நடத்திய ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது. இதனால், கடல்சார் பாதுகாப்பு, எண்ம தொடர்பு மற்றும் எரிசக்தி விநியோகம் ஆகியவை உறுதி செய்யப்படுவதை இரு தரப்பும் விவாதித்தது. அதனைத்தொடர்ந்து, இந்தியா – இத்தாலி உறவுகளை வலுப்படுத்த இத்தாலி அதிபர் அளித்து வரும் ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றியும் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எஃப்ஏஓ ‘அக்ரிகோலா பதக்கம்’ :
இதனிடையே, இத்தாலியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (எஃப்ஏஓ) ‘அக்ரிகோலா பதக்கம்’ வழங்கி புதன்கிழமை(மே 20) கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ரோம் நகரில் அமைந்துள்ள ஐ. நா. தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஃப்ஏஓ இயக்குநர் டாக்டர் ஃக்யு டாங்க்யு பிரதமர் மோடிக்கு பதக்கம் அளித்தார். உணவு பாதுகாப்பு, விவசாயம் மற்றும் ஊரக மேம்பாடு ஆகியவற்றுக்கு அவர் அளித்த பங்களிப்புக்கான அங்கீகாரமாக இவ்வுயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.