;
Athirady Tamil News

தாக்குதல்களால் அதிரும் மத்தியக்கிழக்கு ; எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

0

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள் மீது ஈரான் நடத்திய குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில், இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் எண்மர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

காயமடைந்த எண்மரில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களில் அறுவர் இந்தியப் பிரஜைகள் என்பதுடன் இருவர் உக்ரைன் பிரஜைகள் எனவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் குறிப்பிட்டுள்ளது.

‘மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பஹியா’ (Al Bahia) ஆகிய இரு கப்பல்களும் ஓமான் கடல் எல்லையிலுள்ள ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த ஊழியர் ‘மொம்பாசா’ கப்பலில் இருந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் காரணமாக இரு கப்பல்களிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், கப்பல்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இதனை ஒரு “வெட்கக்கேடான தாக்குதல்” எனப் பலமாகக் கண்டித்துள்ளதுடன், இந்தச் சூழ்நிலைக்கு எதிராகப் பதிலடி கொடுப்பதற்கான முழுமையான உரிமை தமக்கு உண்டு என்றும் கூறியுள்ளது.

எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியம் முழுத் தயார் நிலையில் இருப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிக்கும் கடுமையான பதிலடி கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.