செங்கடலில் சவுதி அரேபியா கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா, ஈரானின் மின் உற்பத்தி தளங்கள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை நாசப்படுத்தி வருகிறது.இதற்கு கடும் பதிலடி கொடுத்து வரும் ஈரானும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை குறி வைத்து சேதப்படுத்தி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் இந்த தாக்குதல்கள் 12-வது நாளாக நேற்று முன்தினமும் நீடித்தது.கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளால் உலகம் முழுவதும் அவதிக்குள்ளாக்கி வரும் இந்த மோதலில் நேற்று புதிய திருப்பம் ஏற்பட்டது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
அதாவது ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்களை தாக்கி புதிய பரபரப்பை பற்ற வைத்தனர். செங்கடலில் கப்பல் போக்குவரத்துக்கு அவ்வப்போது இடையூறு ஏற்படுத்தி வரும் அவர்கள் மீண்டும் இந்த தாக்குதல்களை தொடங்கி உள்ளனர்.அதன்படி செங்கடலில் சென்று கொண்டிருந்த என்சிலியா, லய்லா ஆகிய 2 எண்ணெய் கப்பல்களை இந்த கிளர்ச்சியாளர்கள் தாக்கினர். சவுதி அரேபியாவுக்கு சொந்தமான இந்த கப்பல்கள் தீப்பிடித்து எரிந்தன. எனினும் இதில் உயிர்ச்சேதம் குறித்து தகவல் இல்லை.ஈரானுக்கு எதிராக போர் தொடங்கியது முதல் இதுவரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எந்த தாக்குதல்களையும் நடத்தாத நிலையில், தற்போது சவுதி அரேபியாவின் கப்பல்களை தாக்கியிருப்பதன் மூலம் வளைகுடா போரில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
மார்கோ ரூபியோ நம்பிக்கை
எனினும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதல் தொடராது எனவும், அவர்கள் ஈரான் போரில் பங்கேற்க மாட்டார்கள் எனவும் அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.எனினும் இது ஒரு நேர்மறையான நிகழ்வு அல்ல எனக்கூறிய அவர், என்ன நடக்கிறது? என்பதை பார்க்கலாம் என்றும் கூறினார்.இதற்கிடையே ஈரானின் அவாஸ், ராம்ஷிர், ஆண்டிமெஸ்க் உள்ளிட்ட மேற்கு நகரங்களை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. இதில் ஈராக் எல்லையை ஒட் டிய பகுதியில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. அண்டை வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை குறிவைத்து தாக்கியது.
கச்ச எண்ணெய் விலை
இதற்கிடயே, ஈரான் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக “மிகப்பெரிய பதிலடி” கொடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். செங்கடலில் எண்ணெய் கப்பல் குறிவைக்கப்பட்டதால், சர்வதேச கடல் போக்குவரத்து மேலும் பாதிக்கப்படலாம் என்ற கவலை முதலீட்டாளர்களிடையே உருவாகியுள்ளது. குறிப்பாக, மற்றொரு முக்கிய கடல் வழித்தடமும் முடங்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டாலரை கடந்தது. கடந்த மே மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலர் என்ற அளவை மீண்டும் எட்டியுள்ளது. மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்து வருவதால், உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் கடல் வர்த்தகத்தில் இதன் தாக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.