;
Athirady Tamil News

சுற்றுச்சூழலை அழித்து அபிவிருத்தியை அடைய முடியாது

0
முதலீடுகளையும் கைத்தொழில்துறை வளர்ச்சியையும் நாம் மனதார வரவேற்கின்றோம், ஆனால், சுற்றுச்சூழலை அழித்து அல்லது அதற்கு ஊறுவிளைவித்து எந்தவொரு அபிவிருத்தியையும் நாம் நிலைத்து நிற்கும்படி அடைய முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட கழிவு முகாமைத்துவ அனுமதி நடைமுறைகள் தொடர்பான விசேட விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை சுற்றாடல் தொழில் வல்லுநர்கள் நிறுவனம் மற்றும் மனேஜ்மன்ட் க்ளப் ஆகியவை இணைந்து இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தொடக்கவுரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

தொழிற்துறையை வளர்க்க வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அதற்காக எமது மாகாண சபையும் முழுமையான ஒத்துழைப்புக்களையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. தற்போது வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்குச் சாதகமான சூழல் நிலவுவதனால், முதலீட்டாளர்களும் அதிகளவில் வருகை தருகின்றார்கள்.

இங்கு நாம் மிக முக்கிய விடயத்தைக் கவனிக்க வேண்டும். முதலீடுகளையும், வேலை வாய்ப்புக்களை வழங்கும் தொழிற்சாலைகளையும், கைத்தொழில்துறை வளர்ச்சியையும் நாம் மனதார வரவேற்கின்றோம். அதற்கான முழுமையான ஆதரவையும் வழங்குகின்றோம். ஆனால், எமது சுற்றுச்சூழல் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனேயே இவற்றின் வளர்ச்சியை நாம் ஆதரிக்கின்றோம். சுற்றுச்சூழலை அழித்து அல்லது அதற்குத் தீங்கு மற்றும் ஊறுவிளைவித்து எந்தவொரு அபிவிருத்தியையும் நாம் நிலைத்து நிற்கும்படி அடைய முடியாது.

எனவே, இந்த விழிப்புணர்வுக் கலந்துரையாடல் மிக ஆரோக்கியமானதும் முக்கியமானதுமாகும். சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட கழிவு முகாமைத்துவ அனுமதி நடைமுறைகள் என்பன மிக முக்கியமானவை.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றாடல் தொடர்பான சட்டங்களையும் நீங்கள் அறிந்து கொண்டு இவற்றைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, நடைமுறையில் அவற்றைப் பின்பற்றுவதன் ஊடாகவே சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கைக் குறைத்துக்கொள்ள முடியும் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.