;
Athirady Tamil News

கருங்கடலில் தாக்குதல் அதிகரிப்பு: உக்ரைன் அருகே சிக்கி தவிக்கும் 13 இந்திய மாலுமிகள்

0

ரஷ்யா-உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கருங்கடல் பகுதியில் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கருங்கடல் வழியாக செல்லக்கூடிய வணிக கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இந்த நிலையில், பலாவ் நாட்டுக் கொடியுடன் இயங்கும் எம்.வி. அமிர்-1 என்ற சரக்குக் கப்பல் உக்ரைனின் கருங்கடல் துறைமுகமான செர்னோமோர்ஸ்க் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் 13 இந்தியர்கள் உட்பட மொத்தம் 15 பேர் பணியாற்றி வருகின்றனர். துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடைபெறுவதால், கப்பலை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மாலுமிகள் சங்கம் வெளியிட்டுள்ள வீடியோவில், கப்பலைச் சுற்றியுள்ள பகுதியில் புகை மண்டலங்கள் எழுவதும், தாக்குதல்களின் சத்தம் கேட்பதும் பதிவாகியுள்ளது. இதனால் கப்பலில் உள்ள இந்தியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மாலுமிகள் சங்கம், வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறையினர் உடனடியாக தலையிட்டு, உக்ரைன் அதிகாரிகளுடன் இணைந்து 13 இந்திய மாலுமிகளையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது

இதற்கு முன்பு, உக்ரைனின் ஒடேசா துறைமுகம் அருகே நடந்த தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியிருந்தது. அந்த நிலையில், தற்போது மேலும் 13 இந்தியர்கள் போர்ப் பகுதியில் சிக்கியிருப்பது புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.