;
Athirady Tamil News

ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம் ; இலக்கு வைக்கப்படும் மத்தியக்கிழக்கு

0

அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தால், வளைகுடா பிராந்தியத்திலுள்ள முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் எரிசக்தி வலையமைப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் உயர் மட்ட இராஜதந்திர தொடர்புகள் மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தாக்குதல்கள்
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவூதி அரேபியா, துருக்கி, கட்டார் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளிலுள்ள எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சார விநியோகக் கட்டமைப்புகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் போக்குவரத்து வலையமைப்புகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு வளைகுடா நாடுகளை ஈரான் கேட்டுக்கொண்டுள்ளதுடன், இராஜதந்திர ரீதியில் தீர்வுகாண்பதே பிராந்திய அழிவைத் தவிர்க்கும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஈரானின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மான், அமெரிக்க ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு இராணுவ நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் அமைதி ஏற்படுத்த வலியுறுத்தியுள்ளமை குறிப்படத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.