தொண்டைமானாறு செல்வச் சந்நிதி உற்சவத்தினை முன்னிட்டு பக்தர்களுக்கு வசதியளிக்குமுகமாக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஆன்மீக கலை கலாச்சார விடயங்களை மேம்படுத்தவதற்கான செயற்றிட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கலாச்சாரக்குழு மற்றும் ஏனைய குழுக்களும் சனசமூக நிலையங்கள், அரச தினைக்களங்கள் இணைந்ததாக தொண்டைமானாறு பால நுழைவாயிலில் மேடை அமைக்கப்பட்டு ஆன்மீக கலை கலாச்சார போட்டிகள் நடத்தப்பட்டு பிரதேச சபையின் உத்தியோகபூர்வ சான்றிதல்கள் திறமையை வெளிப்படுத்தும் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
உற்சவ கால பணிமனையுடன் இணைந்ததாக சிறப்புச் சொற்பொழிவுகள், ஆன்மிக திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருவதுடன் மக்கள் அதிகளவில் ஆலயத்தினை அடையும் பகுதியில் வாகனத்தரிப்பிடம், இதர சேவைகளைப் வலி கிழக்கு பிரதேச சபை குறைந்த சேவைக்கட்டணத்துடன் நேர்த்தியான முறையில் மேற்கொள்கின்றமை மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஆலயத்தினை அடைகின்ற நீர்ப்பாசனத் தினைக்களத்திற்குச் சொந்தமான பாலப்பகுதியில் சிறப்பு உற்சவ காலப்பணிமனை அமைக்கப்பட்டு அங்கு உப தவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன் தலைமையில் உற்சவகால விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதேச சபையின் கலாச்சாரக் குழுவின் தலைவி விஜயதாரணி நிசாந் தலைமையில் கலாச்சார போட்டிகள் இடம்பெறுவதுடன் சபையின் செயலாளர் இராமலிங்கம் பகிரதன் மற்றும் அச்சவேலி பிரதேச பொறுப்பதிகாரி பகிரதன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஏற்பாடுகளை நிர்வாக ரீதியில் நெறிப்படுத்தி வருவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
பொருமளவில் மக்கள் ஒன்று கூடும் திருவிழா தினங்களை முகாமை செய்யும் வகையில் வீதி போக்குவரத்து வழிகாட்டல் ஒழுங்குகள் பொலிசாருடன் இணைந்த வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் இவ் வருடத்திருவிழாவில் கடந்த கால போக்குவரத்து நெரிசல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு மக்கள் அதிகளவில் மரபு வழியில் வழிபாட்டு முறையாக ஆற்றினை கடந்து சென்று வரும் நீர்ப்பாசனத்தினைக்களத்திற்குச் சொந்தமான பாலத்தின் அருகில் கடைகள் வழங்கப்படுவதை நிறுத்தி விசேட ஒழுங்கு படுத்துதல்களுக்குள்ளாக கடைத் தொகுதிகள் பிரதேச சபையினால் வழங்கப்பட்டுள்ளன.
இறுதித் திருவிழாவில் பக்தர்களுக்கு மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளன. பிரதேச சபையின் உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தார்கள், பணியாளர்கள் என சகலரும் இணைந்து முன்னெடுக்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உற்சவ கால பணிமனையின் சேவைகளை சகலரும் பெற்று பயனடைய வேண்டும் என சபையின் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.