ஆண்டின் இறுதியில் எல்-நினோ நிலைமை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இந்த ஆண்டின் இறுதியில் மிகவும் வலுவான எல்-நினோ நிலைமை உருவாகுவதற்கான சாத்தியக்கூறு 90 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1950ஆம் ஆண்டு முதல் கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல்-நினோ நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை ஏற்படக்கூடிய எல்-நினோ மிகவும் வலுவானதாக அமையக்கூடும் என உலகளாவிய முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
படிப்படியாக வலுப்பெற்று வரும் எல்-நினோ நிலைமை
எல்-நினோ நிலைமை தற்போது படிப்படியாக வலுப்பெற்று வருவதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் அது மிகவும் வலுவான நிலையை அடைவதற்கான சாத்தியக்கூறு 90 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 74 பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது சுமார் 37 சதவீத நீர் மட்டுமே இருப்பதாகவும், தற்போதைய நீர்மட்டம் சிறுபோகச் செய்கைக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களும் விவசாயிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, நாடு முழுவதும் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அவற்றின் அதிகபட்ச கொள்ளளவில் இயங்கி வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
வறட்சியான காலநிலை நிலவினாலும், தற்போதைக்கு குடிநீர் விநியோகத்தில் எந்தவிதக் குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சபை தெரிவித்துள்ளது.