ஆற்றுப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த மனித தலை ; தீவிரமாகும் விசாரணை
மொரட்டுமுல்லை, மேல் இத்பெத்த, குரே பகுதியில் மனித தலை ஒன்று காணப்படுவதாக மொரட்டுமுல்லை பொலிஸாருக்கு 119 அவசர தொலைபேசி இலக்கம் ஊடாகத் தகவல் கிடைத்துள்ளது.
உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட தலை, தச்சர் பட்டறை ஒன்றின் பின்புறமாக உள்ள ஆற்றுப் பகுதிக்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மொரட்டுமுல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தினேஷ் ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
மேலதிக விசாரணை
இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை 8 மணியளவில் குறித்த தச்சர் பட்டறையின் உரிமையாளர் இத் தலையைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மொரட்டுமுல்லை பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸ குற்றவியல் தடயவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து களப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அத்துடன், மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சட்டத்தரணி சந்தமாலி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டார்.
மீட்கப்பட்ட மனித தலை பெரிதும் அழுகிய நிலையில் மிருகங்களால் கடிக்கப்பட்டவாறு காணப்படுவதாகவும், சம்பவம் தொடர்பில் மொரட்டுமுல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.