யாழில் பிரதேச சபை அனுமதியின்றி பௌத்த மத்திய நிலைய கட்டுமானம்
யாழ்ப்பாணம், வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி, கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 4 பரப்பு விஸ்தீரணமுடைய கந்தரோடை விகாரைக் காணியில், குறித்த பௌத்த மத்திய நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுமானப் பணி
அப்போது, பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி, கட்டுமானத்தை நிறுத்துமாறு அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது மீண்டும் குறித்த கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளியிலிருந்து கட்டுமானப் பணிகள் தென்படாத வகையில் உயரமான மறைப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சாதாரண பொதுமக்களின் கட்டுமானங்கள் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்படும்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், இந்தக் கட்டுமானம் தொடர்பில் பிரதேச சபை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரிடம் வினவியபோது, கட்டுமானத்தை நிறுத்துமாறு ஏற்கனவே சபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
எனினும், தற்போது மீண்டும் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருவதால், இது தொடர்பில் சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்
. உள்ளூர் ஆட்சி சட்டங்களுக்கு அமைவாக உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கட்டுமானத்துக்கான அனுமதியைப் பெறாமல் பணிகள் தொடருமானால், நீதிமன்றத்தை நாடுவதற்கு சபை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.