;
Athirady Tamil News

இந்தோனேசிய எரிமலை வெடிப்பு ; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு பாதை மாற்றம்

0

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள அனக் க்ரக்கடோவா (Anak Krakatau) எரிமலை வெடிப்பு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக, அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இருந்து இன்று இரவு இலங்கை நோக்கிப் புறப்படவிருந்த இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்திகள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

எரிமலை வெடிப்பு

ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனக் கரக்கடோவா எரிமலை இன்று தீவிரமாகச் சீற்றமடையத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாகத் தலைநகர் ஜகார்தாவின் சுகர்ணோ-ஹாட்டா சர்வதேச வானூர்தி நிலையம் உட்படப் பல வானூர்தி நிலையங்களின் சேவைகளை இந்தோனேசிய அதிகாரிகள் தற்காலிகமாகப் நிறுத்தி வைத்துள்ளனர்.

எரிமலையிலிருந்து வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளுக்குப் பரவியுள்ள சிலிக்கா துகள்கள் அடங்கிய சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள், வானூர்திகளின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, எரிமலைக்கு மேற்கே உள்ள வான்பரப்பு மற்றும் இலங்கைக்குத் தெற்கே உள்ள வான்வெளி உள்ளிட்ட விரிவான பகுதிகளினூடான விமானப் பயணங்களுக்கு இந்தோனேசிய வான் போக்குவரத்து அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடையே சேவைகளை முன்னெடுக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வானூர்தி நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களின் பயணப் பாதைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.