;
Athirady Tamil News

பிரபல நடிகரின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விபத்தில் பலி!

0

இந்தியா பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற வீதி விபத்தில், காலமான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூத்த ஹரியானா பொலிஸ் அதிகாரி ஓ.பி.சிங்கின் சகோதரி கீதா தேவி மரணமடைந்த நிலையில், அவரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள சுஷாந்த் சிங் ராஜ்புத் குடும்ப உறுப்பினர்கள் பாட்னாவிலிருந்து சென்று கொண்டிருந்தனர். ஓ.பி.சிங்கின் மைத்துனர்தான் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகும்.

2020ம் ஆண்டு, ஜூன் 14ம் திகதி சந்தேகத்திற்கிடமான முறையில் சுஷாந்த் சிங் உயிரிழந்தது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இவர் தோனியின் பயோபிக் திரைப்படத்தில் நடித்து நாடு முழுக்க புகழ் பெற்ற நடிகராகும். பல கோணங்களில் அந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான், சுஷாந்த் சிங் ராஜ்புத் குடும்பத்தில் மற்றொரு சோகம் அரங்கேறியுள்ளது. ஹல்சி பொலிஸ் நிலையத்தின் கீழ் உள்ள பிப்ராவில் நடுநிலைப் பள்ளி அருகே இந்த சாலை விபத்து நடந்துள்ளது.

இதுபற்றி லக்கிசராய் பொலிஸ் கண்காணிப்பாளர் (எஸ்.பி) சுஷில் குமார், கூறுகையில், “ஒரு லொறியும் டாடா சுமோவும் மோதியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். சுமோவில் சென்றவர்கள் பாட்னாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். காயமடைந்த நான்கு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்,” என்று சுஷில் குமார் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் இருவர் பால்முகுந்த் சிங் மற்றும் தில் குஷ் சிங் ஆகியோர் கூடுதல் சிகிச்சைக்காக, பாட்னாவுக்கு அனுப்பப்பட்டனர், பால்மிகி சிங் மற்றும் டோனு சிங் ஆகியோர் லக்கிசராய் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக லக்கிசராய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் லால்ஜித் சிங் (ஓ.பி. சிங்கின் மைத்துனர்), அவரது இரண்டு மகன்கள் அமித் சேகர் என்ற நெமனி சிங் மற்றும் ராம் சந்திர சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பேபி தேவி, அனிதா தேவி மற்றும் சாரதி பிரீதம் குமார் என அடையாளம் காணப்பட்டனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நேரடி குடும்பத்தினர் இல்லை என்ற போதிலும், உயிரிழந்தவர்கள், அவரது உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.