;
Athirady Tamil News

பாராளுமன்றில் பிரதமர் முன்வைத்த இரங்கல் பிரேரணை!!

0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த ரத்நாயக்க, ஆர்.ஆர்.டபிள்யூ.ராஜபக்ஷ, சோமவீர சந்திரசிறி, பி.பீ.திசாநாயக்க மற்றும் எச்.ஆர்.மித்ரபால ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் பிரேரணையை நான் கௌரவ சபையில் முன்வைக்கிறேன்.

பொலன்னறுவையில் இருந்து அரசியலுக்கு வந்த ஆனந்த சரத் குமார ரத்நாயக்க அவர்கள், வடமத்திய மாகாண சபையின் சிரேஷ்ட உறுப்பினராகவும், அவர் காலமாகும் போதும் மாகாண சபையின் தவிசாளராக பணியாற்றினார்.

1977 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் பிரவேசித்த அவர் வடமத்திய மாகாண சபையில் பல்வேறு பதவிகளை வகித்தார். 2001 பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அரசியலில் எந்தப் பதவியை வகித்தாலும், அந்தப் பதவிகளுக்காக அவர் பெருமைப்பட்டதில்லை. அந்த பதவிகளை எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தினார்.

பொலன்னறுவை பளுகஸ்தமன பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும், வடமத்திய மாகாணசபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொலன்னறுவை மக்களுக்கு அவர் ஆற்றிய சேவை பாராட்டப்பட வேண்டியதாகும்.

1965ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தொடம்கஸ்லந்த தொகுதியில் போட்டியிடும் ஆர்.ஆர்.டபிள்யூ.ராஜபக்ஷ அவர்கள் அங்கிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, சுமார் 50 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார். குருநாகல் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சட்டத்துறையில் முக்கிய பங்காற்றினார்.

1955ஆம் ஆண்டு கிராம சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் நுழைந்த ராஜபக்ஷ அவர்கள் 1960 மார்ச் மற்றும் ஜூலையில் இரண்டு பொதுத் தேர்தல்களில் கொம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

1966-ல் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுவால் அவர் பதவியை இழந்தார். எனினும், 1967 ஆம் ஆண்டு தொடம்கஸ்லந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி திருமதி லில்லியன் லெடிஷியா ராஜபக்ஷவை அவர்களை களமிறக்கி வெற்றிபெற செயதார்.

2017ஆம் ஆண்டு காலமான ராஜபக்ஷ அவர்கள் சிறந்த சேவையை ஆற்றிய சமூக ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா சமசமாஜக் கட்சியின் இளைஞர் இயக்கத்துடன் இணைந்து அரசியலில் பிரவேசித்த சோமவீர சந்திரசிறி 1982ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஜனாதிபதித் தேர்தலில் விஜய குமாரதுங்கவுடன் இணைந்து ஹெக்டர் கொப்பேகடுவவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தீவிரமாக ஆதரவளித்ததை நாம் அறிவோம்.

1983 மஹரகம இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினேஷ் குணவர்தனவை ஆதரித்த அவர், அன்றிலிருந்து மகாஜன எக்சத் பெரமுனவின் தீவிரத் தலைவராக இருந்து வருகிறார்.

இலங்கை தொழிற்சங்கங்களின் மத்திய சபையின் செயலாளராக சேவையாற்றி இலங்கை வங்கி, உருக்கு கூட்டுத்தாபனம் போன்ற அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டத்தை திரு.சோமவீர சந்திரசிறி அவர்கள் வழிநடத்தினார்.

1997 ஆம் ஆண்டு மஹஜன எக்சத் பெரமுனவில் (மக்கள் ஐக்கிய முன்னணி) கடுவெல பிரதேச சபைக்கு தெரிவாகி அப்பகுதி மக்களுக்கு சிறந்த சேவையாற்றியவர்.

2000-2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த திரு சோமவீர சந்திரசிறி அவர்கள் இலங்கை போக்குவரத்து சபையின் மேற்பார்வை உறுப்பினராக சிறந்த கடமையாற்றியதை நாம் அறிவோம்.

எனது ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு அவரும் தீவிரமாகப் பங்களித்தார் என்பதை நினைவுகூர வேண்டும்.

2019 இல் காலமான திரு சோமவீர அவர்கள், இலங்கையில் தொழிலாளர் இயக்கத்தையும் தொழிற்சங்க இயக்கத்தையும் வலுப்படுத்த எப்போதும் முயன்றார்.

1963 ஆம் ஆண்டு ஆசிரியராக சமூக சேவையை ஆரம்பித்த திரு.பி.பீ.திஸாநாயக்க அவர்கள் 1991 ஆம் ஆண்டு ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதன் பின்னர் தீவிர அரசியலில் பிரவேசித்து 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு தலாவ பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரானார்.

1993 ஆம் ஆண்டு வடமத்திய மாகாண சபையின் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பொது பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

2003 ஆம் ஆண்டு மீண்டும் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு வடமத்திய மாகாண சபையின் தலைவராகவும் திஸாநாயக்க அவர்கள் பதவியேற்றார்.

வடமத்திய மாகாண மக்களுக்கு சிறந்த சேவையாற்றிய திரு.திஸாநாயக்க அவர்கள் எப்போதும் மக்களின் நலன்களுக்காகவே நின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியராக இருந்தபோது அவருக்கு நிறைய அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

நீண்ட காலம் மக்கள் பிரதிநிதியாக கடமையாற்றிய இவர் 2015 ஆம் ஆண்டு முதல் வடமத்திய மாகாண ஆளுநராகவும் 2018 ஆம் ஆண்டு மத்திய மாகாண ஆளுநராகவும் ரஜரட்ட மற்றும் மத்திய மாகாணங்களில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 இல் மறைந்த அரசியல் செயற்பாட்டாளராக அவரது சேவை பாராட்டப்பட வேண்டியதாகும்.

லங்கா சமசமாஜ கட்சி ஊடாக தீவிர அரசியலில் நுழையும் எச்.ஆர்.மித்ரபால அவர்கள் 1988 ஆம் ஆண்டு சப்ரகமுவ மாகாண சபைக்கு முதன் முதலில் தெரிவு செய்யப்பட்டார். அங்கு எதிர்க்கட்சித் தலைவராக விளங்கினார். 1993 ஆம் ஆண்டு கேகாலை மாவட்டத்தில் இருந்து அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று சப்ரகமுவ மாகாண சபைக்கு மீண்டும் தெரிவானார்.

1994 பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட அவர் 2004 மற்றும் 2010 பொதுத் தேர்தல்களில் கேகாலை மாவட்டத்தில் இருந்து மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

அந்த காலகட்டத்தில் அவர் வர்த்த பிரதி அமைச்சராகவும் பின்னர் நுகர்வோர் விவகார அமைச்சராகவும் இருந்தார். நான் ஜனாதிபதியாக இருந்த போது எமது அரசாங்கத்தில் கிராமிய கைத்தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சராக சேவையாற்றினார்.

1970 பொதுத் தேர்தலில் எனது தேர்தல் பிரசாரத்தில் அவர் தீவிரமாகப் பங்கேற்றது எனக்கு நினைவிருக்கிறது. திரு.மித்ரபால அவர்கள் சப்ரகமுவ துன்கோரளை தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்தார். ஏழை மக்கள் சார்பாக அவர் நீதிமன்றத்தில் இலவசமாக ஆஜரானார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

பௌத்தரான அவர் பிக்குக் கல்வியை மேம்படுத்துவதிலும், விகாரைகளை மேம்படுத்துவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் என்பதும் எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும்.

அரசியலை வியாபாரமாக்காமல், 2019-ம் ஆண்டு காலமான அவர் அதுவரை தனது உயிருக்கான ஆபத்தை பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை செய்வதில் தன்னை அர்ப்பணித்தவர்.

நான் இதுவரை குறிப்பிட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் எனது மற்றும் அரசாங்கத்தின் சார்பிலான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.