;
Athirady Tamil News

இனப் பிரச்சினை குறித்து ஜனவரி முதல் தொடர் பேச்சுக்கள் – ரணில் !!

0

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்குமிடையில் தொடர் பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நாள்தோறும் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

அதிபர், பிரதமர் உள்ளிட்ட தரப்பிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இதனைக் கூறினார்.

இச்சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

சென்றவாரம் இன நல்லிணக்கம் சம்பந்தமான சர்வகட்சி குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டமாக அமைந்திருந்தது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் பேசப்பட்டது. இதன்போது 5 பேரினை உடனடியாக விடுவிக்க கூடியதாக உள்ளதாகவும் மற்றவர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் சில முன்மொழிவுகளை வழங்கவுள்ளதாக சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

படையினர் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் விடுவிப்பு தொடர்பில் பேசப்பட்டது. இதில் இராணுவம் சில நிலங்களை விடுவிப்பதற்கு பிரேரித்திருப்பதாகவும் இது தேசிய பாதுகாப்புச் சபை ஜனவரி 3 ஆம் திகதி கூடியவுடன் அதன்முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள ஜனவரி 5 ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை கூடி அரசியலமைப்பு விடயம் தொடர்பில் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் நீதியமைச்சர், சட்டமா அதிபர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிவிவகார அமைச்சினைச் சேர்ந்தோரும் பங்கேற்றிருந்தனர்.

அதேநேரம், இன்றைய சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.