யாழில் இருந்து மடுமாதாவிற்கு யாத்திரை புறப்பட்ட போது கொளுத்தப்பட்ட வெடி வெடித்து குடும்பஸ்தர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
குருநகர் ஐந்துமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வராசா சுஜீபன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குடியிருப்பு பகுதியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மடுமாதா நோக்கி யாத்திரை புறப்பட்டது.
யாத்திரை புறபாட்டை முன்னிட்டு, பெருமளவான வெடிகள் கொளுத்தப்பட்டன. அதன் போது கொளுத்தப்பட்ட கோர்வை வெடி ஒன்று வெடிக்காத நிலையில் , அதனை மீண்டும் கொளுத்த அருகில் குறித்த நபர் சென்ற போது, எதிர்பாராத விதமாக வெடி வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.