;
Athirady Tamil News

திருப்பதி கோவிலில் கடந்த ஆண்டு உண்டியல் வருமானம் ரூ.1,450 கோடி: தேவஸ்தான அதிகாரி தகவல் !!

0

திருமலையில் உள்ள அன்னமய பவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சிக்கு முன் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பேசியதாவது:- இந்துக்களுக்கு முக்கியமான பண்டிகைகளில் ஒன்று சங்கராந்தி. இந்தத் திருநாளில் அனைத்துப் பக்தர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திருமலையில் ரத சப்தமி விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.

விழாவை பிரமாண்டமாக நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். கோவிலின் நான்கு மாட வீதிகளில் உள்ள கேலரிகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தொடர்ந்து உணவு, குடிநீர், காபி, டீ, பால் வழங்க ஏற்பாடு செய்யப்படும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்குகிறது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் ஏழுமலையான் கோவிலில் 20 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

உண்டியல் வருமானமாக ரூ.129.37 கோடி கிடைத்தது. 1 கோடியே 8 லட்சம் லட்டுகள் விற்பனையாகின. 38 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 8 லட்சத்து 45 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 2022-ம் ஆண்டில் ஏழுமலையான் கோவிலில் 2 கோடியே 37 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

உண்டியல் வருமானமாக ரூ.1450.41 கோடி கிடைத்துள்ளது. 11 கோடியே 54 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4 கோடியே 77 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 1 கோடியே 9 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.