;
Athirady Tamil News

மலேசியாவில் முட்டைக்கு தட்டுப்பாடு!!

0

நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில், மொத்தம் 5.5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

அகில இந்திய அளவில், நாமக்கல் மண்டலம் முட்டை உற்பத்தியில் 2-வது இடத்திலும், முட்டை ஏற்றுமதி தொழிலில் முதலிடத்திலும் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் மஸ்கட், குவைத் , கத்தார், பக்ரைன், லைபீரியா, துபாய், சிரியா, ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்கனவே கப்பல்களில் கண்டெயினர்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது முதன்முறையாக கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி முதல், இந்தியாவில் இருந்து குறிப்பாக நாமக்கல் பகுதிகளில் இருந்து விமானம் மூலம் மலேசியா நாட்டிற்கு முட்டைகள் ஏற்றுமதி தொடங்கி உள்ளது. மலேசியா நாட்டில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டாலும், அங்கு அவர்களுக்கு தேவையான அளவு முட்டை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக நாமக்கல் பகுதிகளில் இருந்து முட்டைகள் ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இன்னும் சுமார் 6 மாதங்களில் மலேசியாவுக்கான இந்தியாவின் முட்டை ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. வரும் மாதங்களில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து, குறிப்பாக நாமக்கல்லில் இருந்து முட்டைகளை வாங்குவார்கள் என்று முட்டை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் நாமக்கல் வல்சன் பரமேஸ்வரன் கூறியதாவது:- நாமக்கல் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 10 கண்டெய்னர் மூலம் 50 லட்சம் முட்டைகள் முதன் முதலாக மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆர்டர்கள் கிடைத்து வருகிறது. இந்த மாதம் மட்டும் 20 கண்டெய்னர் மூலம் 1 கோடி முட்டைகள் அனுப்பப்பட உள்ளது. இது பிப்ரவரி மாதம் இது 40 கண்டெய்னர்களாக உயரும் வாய்ப்புள்ளது. நாமக்கல் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தரமாகவும், ஏற்றுமதிக்கான எடையும் சரியாக உள்ளதால், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் நாமக்கல் முட்டையை வாங்க தொடங்கி உள்ளனர். மற்ற நாடுகளை விட இந்தியாவில் முட்டை விலை குறைவாகவே உள்ளது. முட்டை ஏற்றுமதிக்கு இதுவும் ஒரு வாய்ப்பாகும். ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக விரைவில் மேலும் பல நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யும் சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.