;
Athirady Tamil News

டிரோன் மூலம் கொசுக்கள் ஒழிப்பு- மாநகராட்சி நடவடிக்கை!!

0

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுத்தொல்லை மற்றும் கொசுக்களினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியினைக் கட்டுப்படுத்த டிரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பக்கிங்ஹாம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களில் நேற்று முன்தினம்(செவ்வாய் கிழமை) டிரோன் இயந்திரங்களைக் கொண்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று(புதன் கிழமை) தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், பக்கிங்ஹாம் கால்வாய், லிங்க் கால்வாய்களிலும், கோடம்பாக்கம் மண்டலத்துக்குட்பட்ட ஆர்.வி. நகர் கால்வாய், மாம்பலம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், அடையாறு ஆறு ஆகியவற்றிலும், அடையாறு மண்டலத்துக்குட்பட்ட மாம்பலம் கால்வாயிலும் டிரோன் இயந்திரங்களைக் கொண்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் நேற்று டிரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணியினை பெரம்பூர் எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.