;
Athirady Tamil News

பொலிஸாருக்கு சவால் விட்ட பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ‘டெங்கு ஒழிப்பு’ மாறுவேடத்தில் கைது 

0

பொலிஸாருக்கு சவால் விட்ட பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ‘டெங்கு ஒழிப்பு’ மாறுவேடத்தில் கைது

உகண  மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான கடத்தல்காரர், சிசிடிவி (CCTV) பாதுகாப்பு மற்றும் பொலிஸ் உளவாளிகளின் தடைகளையும் தாண்டி, அம்பாறை கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். உகண -21, திஸ்ஸபுர கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலேயே இந்தச் சதுரங்க வேட்டை அரங்கேறியுள்ளது.

பொலிஸாரை ஏமாற்றிய கடத்தல் வலைப்பின்னல்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக உகண  பொலிஸ் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே இந்த போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளார். தனது வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் மற்றும் விசேட விளக்குகளைப் பொருத்தி, பொலிஸாரின் நடமாட்டத்தை அவர் கண்காணித்து வந்துள்ளார்.

பொலிஸார் சோதனையிட வரும்போதெல்லாம், அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட சில ஊழல் அதிகாரிகளிடமிருந்தோ அல்லது வெளியிலுள்ள உளவாளிகளிடமிருந்தோ முன்கூட்டியே தகவல் கிடைத்துவிடுவதால், அவர் தப்பியோடி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அண்மையில் இறக்காமம்  பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் (SI) ஒருவருக்கும், இந்தச் சந்தேக நபருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். உகண பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி லங்காதேவ மற்றும் தற்போதைய பிரதம பொலிஸ் பரிசோதகர் (HQI) சுமித் குணவர்தன ஆகியோர் மேற்கொண்ட முந்தைய சோதனைகள் தோல்வியடைந்ததற்கும் இந்த உள்ளகத் தகவல் கசிவே முக்கியக் காரணமாக இருந்துள்ளது.

‘டெங்கு ஒழிப்புப் பிரிவு’ மாறுவேடத்தில் பாய்ந்த பொலிஸ்

தொடர் தோல்விகளைத் அடுத்து, அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சுஜித் வேதமுல்லவின் நேரடித் தலையீட்டின் கீழ் விசேட திட்டமொன்று தீட்டப்பட்டது. இதற்கமைய, அம்பாறை மாவட்ட  குற்றப் புலனாய்வு பிரிவு   பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர், தங்களை ‘டெங்கு ஒழிப்புப் பரிசோதகர்கள்’ போல மாற்றிக்கொண்டனர். இக்குழுவில் கர்ப்பிணிப் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரும் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்ற பொலிஸ் குழுவினர், டெங்கு நுளம்புப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வீட்டின் பின்புறம் மற்றும் சுற்று சூழலை பரிசோதனை செய்தனர். இதன்போது சந்தேக நபர் பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு, “தற்போது கொரோனா காலம் அல்ல, ஏன் டெங்குவை சோதிக்க வருகிறீர்கள்?” எனக் கூறி திசைதிருப்ப முயன்றார். எனினும், அந்தப் பகுதியில் மாறுவேடத்தில் மறைந்திருந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகள் திடீரெனப் பாய்ந்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்தனர்.

2 இலட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சி

கைது செய்யப்பட்ட வேளையில், சந்தேக நபர் தன்னை விடுவிப்பதற்காக பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்கவிடம் 2 இலட்சம் ரூபாய் லஞ்சம் தர முன்வந்துள்ளார். எனினும், லஞ்சக் கோரிக்கையை நிராகரித்த பொலிஸார், சந்தேக நபரை உடனடியாகப் பொலிஸ் வாகனத்தில் ஏற்றி அம்பாறை மாவட்ட  குற்றப் புலனாய்வு  பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் மற்றும் 30 மில்லிகிராம் ஏனைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சந்தேக நபரை அம்பாறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, நீதவான் திருமதி புஷ்பராஜா ஆனந்தவதனி சந்தேக நபரை 7 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

பாராட்டுக்குரிய கூட்டு நடவடிக்கை

பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சுஜித் வேதமுல்லவின் வழிகாட்டலில், அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரியந்த பண்டார கஸ்தூரியாரச்சி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் மேற்பார்வையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இவ்வதிரடி நடவடிக்கையில் பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க, பொலிஸ் பரிசோதகர் எஸ்.பண்டார, பொலிஸ் உத்தியோகத்தர்களான ரஞ்சித் (60052), சந்திரசேன (67764), திஸ்ஸநாயக்க (89795), சுனில் (95062), சஞ்சீவ (91287), அஜித் (102796), பெண் பொலிஸ் உத்தியோகத்தர் செவ்வந்தி (80622), மற்றும் சுதேஷ் (21016), சச்சந்த ஆகியோர் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.