;
Athirady Tamil News

நாட்டில் முதல்முறையாக காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிப்பு!!

0

நாட்டில் முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கனிமமான லித்தியம் தாதுப்பொருள் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால் ஹைமானா பகுதியில், லித்தியம் படிமம் 59 லட்சம் டன் அளவுக்கு இருப்பதாக மத்திய சுரங்கத்துறை தெரிவித்துள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையம் 2018-19 ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் புவியியல் ஆய்வை தொடங்கியது. 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த ஆய்வில் ஜம்மு காஷ்மீரிலும் தமிழ் நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட் ஆகிய 10 மாநிலங்களிலும் தங்கம், லித்தியம், மாலிப்டினம் உள்பட 51 வகை கனிம தொகுதிகளை கண்டறிந்து உள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டு பிடிக்கப்படுவது இதுேவ முதல்முறை.

மொபைல் போன், லேப் டாப், உள்ளிட்ட மின்சாதங்களில் பயன்படுத்தப்படுவது லித்தியம் அயன்பேட்டரி தான். மின் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் லித்தியம் மிக முக்கியமான மூல பொருளாக உள்ளது. இதனால் கச்சா எண்ணை போல, லித்தியம் சர்வதேச முக்கியத்துவம் பெற்று உள்ளது. பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட புதை படிவ எரி பொருள்கள் கரியமில வாயு வெளியேற்றத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த நிலையில் கால நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த புதை படிவ எரிசக்தியை உருவாக்கும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக மின் வாகனங்களை நோக்கி உலக நாடுகள் நகர்ந்து வருகின்றன.

வரும் 2035-ம் ஆண்டில் உலக அளவில் புழக்கத்தில் இருக்கும் வாகனங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவை மின் வாகனங்களாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் 2030ம் ஆண்டில் பதிவு செய்யப்படும் வாகனங்களில் 30 சதவீதம் மின் வாகனங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் மின் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் உலக நாடுகள் சவால்களை எதிர் கொண்டு வருகின்றன. பேட்டரி தயாரிப்புக்கு லித்தியம், நிக்கல், கோபால்ட் உள்ளிட்ட கனிமங்கள் அவசியம். இவை போதுமான அளவில் கண்டு பிடிக்கப்படவில்லை.

சிலி, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அதிக அளவில் லித்தியம் இருப்பைக் கொண்டிருக்கின்றன. மின் வாகனத் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கும் நோக்கில் உலக நாடுகள் லித்தியம் இருப்பை கண்டறிய தீவிர முயற்சி மேற் கொண்டு வருகின்றன. இந்த சூழலில் இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ததாக உள்ளது. இந்தியாவில் சமீப ஆண்டுகளாக மின் வாகன விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் லித்தியம் இருப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் வெளி நாடுகளில் இருந்து லித்தியம் அயன்பேட்டரி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மின் வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உள் நாட்டில்யே லித்தியம் அயன்பேட்டரி தயாரிப்பை மேற் கொள்வதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.