;
Athirady Tamil News

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெறும்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

0

கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 224 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பதாக கூறியது. அதன்படி, இன்று நண்பகல் 12 மணியளவில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் வரும் மே 10ம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 20ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை ஏப்ரல் 21ம் தேதி என்றும் வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 24ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.