;
Athirady Tamil News

ரஷ்யாவில் அடுத்தடுத்து பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ; பீதியில் உறைந்த மக்கள்

0

ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியிலுள்ள கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று (19) வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக 6.3 ரிச்டர் அலகாக வலுவான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பிலிருந்து 15.4 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி கம்சாத்கா பிராந்தியத்தின் நிர்வாக மையமான ‘பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி’ என்ற துறைமுக நகரத்திலிருந்து கிழக்கே சுமார் 183 கிலோமீட்டர் தொலைவில் கடலில் அமைந்திருந்தது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரம் மற்றும் அதன் அருகிலுள்ள எலிசோவோ , வல்கானி போன்ற குடியிருப்புப் பகுதிகளில் பரவலாக உணரப்பட்டன.

அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த விளக்குகள், தளபாடங்கள் ஆடியதாக மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகளோ அல்லது உயிர்ச்சேதங்களோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

நிலநடுக்க ஆராய்ச்சியாளர்கள்கூற்றுப்படி, இன்று கம்சாத்கா கடற்கரையில் மிகக் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

இந்த 6.3 ரிச்டர் நிலநடுக்கம் ஏற்படுவதற்குச் சரியாக ஒரு நிமிடத்திற்கு முன்பு, அதே பகுதியில் 5.5 முதல் 5.6 ரிச்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

இந்த முதல் நிலநடுக்கம் குறைந்த ரிச்டர் அளவைக் கொண்டிருந்தாலும், சில குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில் மிகத் தீவிரமாக உணரப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.