;
Athirady Tamil News

இந்தியாவில் ஒரே நாளில் 6,050 பேருக்கு கொரோனா!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,050 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4-ந் தேதி பாதிப்பு 3,038 ஆக இருந்தது. மறுநாள் 4,435 ஆகவும், நேற்று 5,335 ஆகவும் உயர்ந்தது. இந்நிலையில் இன்று 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு 13 சதவீதம் அதிகரித்துள்ளது. கடைசியாக செப்டம்பர் 16-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 6,298 ஆக இருந்தது. அதன்பிறகு சுமார் 6 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 1,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 803, டெல்லியில் 606, இமாச்சலபிரதேசத்தில் 367, குஜராத்தில் 327, கர்நாடகாவில் 323, அரியானாவில் 318, தமிழ்நாட்டில் 273, உத்தரபிரதேசத்தில் 192, ராஜஸ்தானில் 100, சத்தீஸ்கரில் 102, பஞ்சாப்பில் 111, கோவாவில் 162 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 45 ஆயிரத்து 104 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,320 பேர் உள்பட நாடுமுழுவதும் இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 85 ஆயிரத்து 858 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 28,303 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 2,716 அதிகமாகும். கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிராவில் 3 பேர், ராஜஸ்தான், கர்நாடகாவில் தலா 2 பேர் மற்றும் பஞ்சாப், டெல்லி, குஜராத், அரியானா, இமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவர் என 13 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட இறப்புகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.