;
Athirady Tamil News

மாற்றத்துக்கு தயாராகும் தாய்லாந்து: மன்னராட்சிக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இளைஞர்கள்!!!

0

தாய்லாந்தில் மன்னர் ஆட்சிமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞர்களுக்கு அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளன.

தாய்லாந்தில் பல ஆண்டுகளாக மன்னர் ஆட்சி முறை வழக்கத்தில் உள்ளது. தற்போது தாய்லாந்து மன்னராக வஜ்ரலாங்கோர்ன் உள்ளார். தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபோல் அதுல்யதேஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து, அவரின் மகனாக வஜ்ரலாங்கோர்ன் மன்னராவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும் அவர் மன்னரானார். இந்த நிலையில்தான் 2019-ல் வஜ்ரலாங்கோர்ன் தனது காதலிகளுடன் வலம் வரும் புகைப்படங்கள் வெளியாகி தாய்லாந்தில் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் நான்காவது மனைவியாக தனது பாதுகாவலரை வஜ்ரலாங்கோர்ன் மணந்து கொண்டது அவரை மேலும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியது.

பதவி மற்றும் செல்வத்தை மட்டுமே வஜ்ரலாங்கோர்ன் விரும்புகிறார். மக்களின் நலனில் அவருக்கு அக்கறை இல்லை எனவும் விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாகவே மாணவ அமைப்பினர் 2020-ல் மன்னர் ஆட்சிக்கு எதிராகவும், ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் சோந்திச்சா ஜாங்க்ரூ (30) . மன்னருக்கு எதிராக போராடியதற்கு சோந்திச்சாவுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

சோந்திச்சா

தற்போது சோந்திச்சா தாய்லாந்தின் முன்னேற்ற கட்சி சார்பாக மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இவருடன் மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய இன்னும் சிலரும் நாடாளுமன்றத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளனர்.

இந்தத் தேர்தலுக்காக சோந்திச்சா வீதி வீதியா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து சோந்திச்சா கூறும்போது, “நீங்கள் மாற்றத்தை விரும்பினால் வெறும் போராட்டத்தை மட்டும் நடத்திக் கொண்டிருக்க முடியாது. நாடாளுமன்றத்தை மட்டுமே சார்ந்திருக்க முடியும். இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

தேர்தலை எதிர்கொள்ளும் மற்றுமொரு மாணவ சமூக செயற்பாட்டாளர் டோடோ (32) கூறும்போது, “நான் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பதற்கு காரணம் வெறும் போராட்டங்கள் மட்டும் போதாது என்று நான் உணர்ந்து இருக்கிறேன். மாற்றங்களைச் செய்வதற்கான அதிகாரத்தை ஜனநாயக ரீதியாக வழங்குவதற்கு மக்களிடமிருந்து எங்களுக்கு உதவி தேவை” என்று தெரிவித்துள்ளார்.

மன்னாராட்சிக்கு எதிராக போராடி தற்போது தேர்தலை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு, மக்களிடம் அதிகரித்து இருப்பதாக ஊடகங்களும் கணித்து செய்தி வெளியிட்டுள்ளன.

தாய்லாந்தின் மன்னர் மற்றும் ராணுவ ஆட்சி வரலாற்றில் இந்த மாணவ இயக்கங்கள் புதிய நம்பிக்கையை விதையை மக்கள் மனதில் விதைத்து வருகின்றனர். எனினும், இந்த மாணவ செயற்பாட்டாளர்களின் பயணம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.