பாக். முன்னாள் ராணுவ தளபதி பேச்சால் பரபரப்பு இந்தியாவை எதிர்கொள்ள பாக். ராணுவத்துக்கு பலம் இல்லை!!
இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தானுக்கு ஆயுத பலம் மற்றும் பொருளாதார பலம் இல்லை என்று அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா சமீபத்தில் தொலைக்காட்சி நிருபர்களிடம் பேசும்போது, பாகிஸ்தான் ராணுவம் போருக்கு தயாராக இல்லை. இந்தியாவுடன் போர் நடந்தால் அதை எதிர்கொள்வதற்கான ஆயுத பலம் மற்றும் பொருளாதார சக்தியும் இல்லை என கூறியதாக பத்திரிகையாளரான ஹமீத் மிர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் ராணுவத்திடம் உள்ள சில ஆயுதங்களின் திறன் குறித்து மீடியாக்களில் அதிகளவு விவாதிக்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிர்கால அச்சுறுத்தல் குறித்து முன்னாள் ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா கூறியதாக வெளிவந்த செய்திகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதங்கள், கருவிகள் மற்றும் வீரர்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளது. ராணுவ தளபதியாக இருந்த கமர் ஜாவித் கடந்த ஆண்டு நவம்பரில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.