ஒருபோதும் தாக்குதலை நிறுத்தமாட்டோம் – ஜெலென்ஸ்கி சூளுரை..!
ககோவ்கா நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட பேரழிவு தங்களை நிறுத்தாது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சூளுரைத்துள்ளார்.
தெற்கு உக்ரைன் பகுதியில் உள்ள ககோவ்கா நீர்மின் நிலைய அணை அழிக்கப்பட்டதற்கு ரஷ்யாவும், உக்ரைனும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டினர்.
ஆனால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியோ இது ரஷ்ய பயங்கரவாதிகளின் சதி செயல் என பகிரங்கமாக கூறி வருகிறார்.
அணை உடைந்து வெள்ளம் வெளியேறும் காணொளியை பகிர்ந்த அவர், உக்ரைனிய நிலத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தங்களுடைய அனைத்து நிலங்களையும் விடுவிப்போம் என அவர் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ரஷ்ய பயங்கரவாதிகளால் ககோவ்கா நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட பேரழிவு உக்ரைன் மற்றும் உக்ரைனியர்களை நிறுத்தாது.
இன்னும் எங்களுடைய அனைத்து நிலங்களையும் விடுவிப்போம். ஒவ்வொரு பயங்கரவாத செயலிலும், ரஷ்யா தனது குற்றங்களுக்கு செலுத்தும் இழப்பீட்டுத் தொகையை மட்டுமே அதிகரிக்கிறது.
ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் நிலத்தில் தங்குவதற்கான அனுமதி ஒருபோதும் வழங்கப்படாது’ என கூறியுள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அணை உடைப்பு ரஷ்யாவின் நாசவேலை என குற்றம்சாட்டினார். மேலும் அவர் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் ரஷ்யாவை கண்டித்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் கடுமையாக ரஷ்யாவை சாடியதுடன், சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
அவரது கண்டன பதிவில், ‘ரஷ்ய இராணுவம் மீண்டும் அனைவருக்கும் தாங்கள் ஒரு பயங்கரவாதிகள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
அதுதான் வேண்டுமென்றே நிகழ்ந்த உக்ரைனில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றின் அழிவு.
ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னர் இந்த பகுதிகளில் குறைந்தது 100 ஆயிரம் மக்கள் வாழ்ந்தனர். குறைந்தது பல்லாயிரக்கணக்கானவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
சாதாரண குடிநீர் கிடைக்காமல் இலட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில், ஆக்கிரமிப்பளார்கள் மக்களுக்கு உதவ முயற்சிக்கவில்லை’ என கூறியுள்ளார்.
அத்துடன், ரஷ்யா யாருடைய நிலத்தைக் கைப்பற்றிக் கொண்டதோ அந்த மக்களை ரஷ்யா எப்படி கொடுமைப்படுத்துகிறது என்பதையும் ஐரோப்பாவிற்கும், உலகிற்கும் ரஷ்யா வெயிப்படுத்தி வருகிறது என்பதையும் இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது என தெரிவித்துள்ளார்.