அமைச்சர் செந்தில் பாலாஜி கைது- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்!!
தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சருக்கு இதயத்தில் 3 அடைப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறையை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. கைது நடவடிக்கைகளின் மூலம் பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட வாங்க முடியாது. அரசியல் பழிவாங்கலால் பாராமுகமாகி நமது ஜனநாயகத்திற்கு மாற்ற முடியாத சேதத்தை பாஜக ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.