சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளியிடம் சமரச முயற்சி: குஜராத் நீதிமன்றம் உத்தரவு!!
சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளியிடம் சமரச தீர்வு காண குஜராத் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விவாதமாகி உள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமியின் 7 மாத கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி அவரது தந்தை குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சமீர் தவே, ‘‘அந்த காலத்தில் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைப்பார்கள். அப்போது 17 வயதிலேயே முதல் குழந்தை பெற்றெடுப்பது சாதாரணமாக இருந்தன. இந்த விஷயத்தில் குற்றவாளியுடன் சமரசம் செய்வதற்கான வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆராய வேண்டும்’’ என்றார்.
இந்த வழக்கில் சிறுமியை பலாத்காரம் செய்த 23 வயது வாலிபர் நேரில் ஆஜராகி கூறுகையில், ‘‘எனக்கு 2 ஆண்டுக்கு முன் திருணமாகி விட்டது. என் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்’’ எனக் கூறி சமரசத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லை என கூறி விட்டார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பலாத்காரம் செய்த குற்றவாளியிடம் நீதிபதி மேற்கொண்ட சமரச முயற்சி தற்போது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. 2 உயிர்கள் சம்மந்தப்பட்ட பிரச்னை என்பதால் இந்த சமரச முயற்சி மேற்கொண்டதாக நீதிபதி விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.