;
Athirady Tamil News

பவானிசாகர் அணை பகுதியில் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கிய மீனவர்கள்!!

0

அணையில் தனியாருக்கு விடப்பட்ட மீன்பிடி ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழகத்தின் 2-வது பெரிய அணையாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது. அணையில் மிருகால், லோகு, கெண்டை, கெழுத்தி, விலாங்கு, ஜிலேபி உள்பட பல்வேறு வகையான மீன்கள் உள்ளது. அணையில் இருந்து தினமும் சுமார் 1 டன் (1000 கிலோ) மீன்கள் பிடிக்கப்படுகிறது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள், ஈரோடு, சத்தியமங்கலம், புளியம்பட்டி, கோபிசெட்டிபாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கோவை, திருப்பூர், சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பவானிசாகர் அணை மீன்கள் கொண்டு செல்லப்படுகிறது.

அணையின் நீர் தேக்க பகுதியில் மீன் பிடிப்பதற்காக உரிம ஒப்பந்தம் செய்யப்பட்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அணையில் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 622 மீனவர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மீன் பிடி தொழிலாளர்கள் என 1000-க்கும் மேற்பட்டவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். இந்த நிலையில் அணையில் தனியாருக்கு விடப்பட்ட மீன்பிடி ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து பவானி சாகர் அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாள பாளையத்தில் நடந்தது.

கூட்டத்தில் பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை பவானிசாகர் மற்றும் சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன் பிடிக்கும் உரிமத்தை வழங்கலாம் என ஐகோர்ட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே கோர்ட்டு உத்தரவுப்படி மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன் பிடிக்கும் உரிமத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து பவானிசாகர் அணை பகுதியில் மீன் பிடிக்கும் உரிமத்தை மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பவானிசாகர் அணை பகுதி மீனவர்கள் தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை இன்று (செவ்வாயக்கிழமை) தொடங்கினார்கள். இதையொட்டி பவானி சாகர் கரையோர பகுதிகள், சுஜில் குட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் படகு, பரிசல்களை கவிழ்த்து போட்டு இருந்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். இதனால் பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.