;
Athirady Tamil News

முதன் முறையாக “வடக்கு சர்வதேச வர்த்தக கண்காட்சி!!

0

வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் துறையை விருத்தி செய்யும் நோக்கில் முதன் முறையாக “வடக்கு சர்வதேச வர்த்தக கண்காட்சி (Northern International Trade Exhibition – NITE 2023)” எதிர்வரும் ஆகஸ்ட் 11 முதல்13 வரை யாழ்ப்பாண கலாசார மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கண்காட்சி தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று வியாழக்கிழமை (22) இடம்பெற்றது.

வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளது.

புதிய வர்த்தக தொடர்புகள் மற்றும் எதிர்கால வர்த்தக வாய்ப்புகளை கட்டியெழுப்பும் முயற்சியாகவும் வட மாகாண கைத்தொழில் வர்த்தக வணிகங்களின் தளமாகவும் இந்த வடக்கு சர்வதேச வர்த்தக கண்காட்சி அமையுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றமானது (NCI) ஜேர்மன் நாட்டின் ஆசிய பசுபிக் வியாபார கூட்டமைப்புடன் (Asia Pasific Business Association – OAV) இணைந்து கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் பல்வேறு தொழில்சார் அபிவிருத்தித் திட்டங்களை வடக்கு மாகாணத்தில் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் ஒரு அங்கமாக வடக்கு சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் அபிவிருத்திக்கான பல்வேறு வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த ஜேர்மன் நாட்டின் ஆசிய பசுபிக் வியாபார கூட்டமைப்பு தயாராகவுள்ளது.

நிறுவனங்கள், வணிகர்கள்,உள்ளூர் வர்த்தகத்தில் ஆர்வமுள்ள இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான பார்வையாளர்களை எதிர்பார்க்கிறோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றத்தின் தலைவர் கனகசபை பூரணச்சந்திரன், வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றத்தின் துணைத் தலைவர் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் ஊடக சந்திப்பில் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.